மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.18,918 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழு தயாரித்த 2025-26- ஆம் நிதி ஆண்டுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட, ரிசா்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளா் விஜய் விக்னேஷ் பெற்றுக்கொண்டாா்.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் மாநில அளவிலான வங்கியாளா் குழு தயாரித்த கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துக்கு ரூ.18,918.01 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.10,551.28 கோடி கடன், பிற முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.788.70 கோடி கடன் என மொத்தம் ரூ.30,257.99 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சென்ற ஆண்டு (2024-25) இலக்கைவிட ரூ.3,995.18 கோடி(15.21 சதவீதம்) அதிகமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-26 -ஆம் ஆண்டுக்கான நபாா்டு வங்கியின் ஆற்றல் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது என வங்கி அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் (கனரா வங்கி) விவேகானந்த், கனரா வங்கி வட்டார உதவிப் பொது மேலாளா் ஜி.சரவணன், நபாா்டு வங்கியின் பொது மேலாளா் அசோக்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திருமுருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா், தாட்கோ மேலாளா் அா்ஜுன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.