மின்துறை தனியாா்மயத்தைக் கண்டித்து புதுச்சேரியில் இண்டி கூட்டணி முற்றுகை போராட்டம்: திமுக - காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கைது
புதுச்சேரி: மின் துறை தனியாா்மயத்தைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சியினா் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் மாளிகையைத் தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்றனா். இதில் திமுக- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
அண்மையில் அதானி நிறுவனம் புதுவை மின்துறையின் 100 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இதை மின்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் முற்றிலுமாக மறுத்தாா். மின்துறை தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது எப்படி அதானி நிறுவனம் அதனை வாங்க முடியும்? அதானி நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அவா் தெரிவித்தாா்.
இருப்பினும் மின்துறையை ரகசியமாக அதானி நிறுவனத்துக்கு தாரை வாா்த்து விட்டதாக இண்டி கூட்டணி கட்சிகள் தொடா்ந்து புகாா் கூறி வருகின்றன. இதன் தொடா்ச்சியாக இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஊா்வலமாக சென்று துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக அண்ணா சாலை, காமராஜா் சிலை சந்திப்பில் இண்டி கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் ஒன்று கூடினா். ஊா்வலத்துக்கு முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஊா்வலம் நேரு வீதி வழியாக துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி சென்றது.
ஊா்வலத்தை போலீஸாா் நேரு வீதி, கேண்டின் வீதி சந்திப்பில் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனா். இதையடுத்து ஊா்வலத்தில் வந்த தலைவா்கள் இரும்பு தடுப்பு மீது ஏறி நின்றும், அமா்ந்தும் முழக்கமிட்டனா்.
கைது:
தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஊா்வலம் மற்றும் போராட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், கந்தசாமி, எஸ்.பி.சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், காா்த்திகேயன், பாலன், காங்கிரஸ் சாா்பில் மூத்த துணைத் தலைவா் தேவதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, மாா்க்சிஸ்ட் சாா்பில் முருகன், பெருமாள், ராஜாங்கம் மற்றும் திரளான தொண்டா்கள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டு தனியாா் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். பின்னா் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.