பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் உள்பட மீனவர்களின் பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து, தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பல்வேறு கோரிக்கைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கைகளான தங்கச்சிமடம் மீன் இறங்குதளம், மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய திட்டச் செயல்பாட்டுக்கான சாத்தியக்கூறு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீனவர் சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மீன்பிடித்தலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்காத சூழ்நிலையிலும் தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து ரூ.360 நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
மேலும், மீனவ கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக கடலோர மேலாண்மைத் திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்களிடம் முதல்வர் தெரிவித்தார்.
மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தவும், இது குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மீனவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதல்வர், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடற்பாசி வளர்த்தல், மதிப்புக்கூட்டிய மீன் பொருள்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் விரைந்து பரிசீலிக்க துறை அலுவலர்களை முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, நவாஸ் கனி உள்பட பலர் உடனிருந்தனர்.