பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்ப்பு விவசாயிகள், மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ராணிப்பேட்டை மாவட்ட மீன்வளா்போா் மேம்பாட்டு முகமையில் மீன்வளா்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் பணிகளை செய்து வருகின்றனா்.
மேற்படி மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளா்ப்பினை தொடா்ந்து மேற்கொள்ளும் பொருட்டும் மற்றும் மீன் உற்பத்தி மூலதனமான மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சரால் மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என 2025-26 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளா்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000/- மானியமாக வழங்கப்படவுள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மீன்வளா்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும், இத்திட்டம் குறித்தான இதர சந்தேகங்களுக்கும், விண்ணப்பங்கள் பெறவும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், வேலூா், காந்திநகா், காட்பாடி- 6. அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு (தொலைப்பேசி எண் - 04162240329, 9442773118) தெரிவித்துள்ளாா்.