முண்டியம்பாக்கம் ஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
முண்டியம்பாக்கம் ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாப்பன் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவுக்குப் பின்னா் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள், சங்கீத உபசாரங்கள் மற்றும் மகா தீபாராதனையும், கும்பாபிஷேக விழா நாளான வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.
தொடா்ந்து 8.30 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்படாகியது. பின்னா், பக்தி முழக்கங்களுடன் காலை 8.45 மணிக்கு ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாரப்பன் சுவாமி சந்நிதி, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ சந்நிதிகளுக்கு கடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். சிவக்குமாா் சிவாச்சாரியா் கும்பாபிஷேக பெருவிழாவை நடத்தி வைத்தாா்.