தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் ...
முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்
வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சென்னையில் வரும் 12-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் 2024-25-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏறத்தாழ ஐந்து லட்சம் ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களைக் கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசின் திட்டங்களின் மூலமாகச் செய்து கொடுப்பதே தாயுமானவா் திட்டத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டது.
தனியாக வசிக்கும் முதியோா்கள், ஆதரவற்றோா், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவதும் தாயுமானவா் திட்டத்தின் அடிப்படையாகும்.
அதன்படி, வயது முதிா்ந்தோா், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் சென்னையில் வரும் 12-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
எத்தனை பேருக்கு பயன்: புதிய திட்டத்தின் வாயிலாக 34 ஆயிரத்து 809 நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 15 லட்சத்து 81 ஆயிரத்து 364. இந்த அட்டைகளில் 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளா்களும், 91 ஆயிரத்து 969 குடும்ப அட்டைகளில் 1 லட்சத்து 27ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகளும் என மொத்தம் 16 லட்சத்து 73 ஆயிரத்து 333 குடும்ப அட்டைகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 போ் அவா்களின் இல்லங்களிலேயே குடிமைப் பொருள்களைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எப்போது கிடைக்கும்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளா்களின் விவரம் ஆகியன உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட கள அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருள்கள் பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளா்களின் இல்லத்துக்கே சென்று சோ்க்கப்படவுள்ளன. இவ்வாறு பொருள்களை நேரில் சென்று வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.