சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
முதல்வரின் கவனத்திற்கு பாசன ஆறுகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
திருவாரூா், நாகை மாவட்டங்களில் பாசன ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நீண்ட நாள்களாக விடுத்துவரும் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனம் பெறுமா? என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
திருவாரூா் மற்றும் நாகை மாவட்டங்களில் பல இடங்களில் பாசனம் மற்றும் வடிகால் நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள் பேரிடா் காலங்களில் பெரும் சவாலாக உள்ளது. இச்செடிகள், பாசனம் மற்றும் உபரிநீா் வெளியேற்றத்தை தடுப்பதுடன், நீரை மாசடைய செய்து, சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
காவிரி படுகை பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் முறையாக அகற்றப்படாத ஆகாயத் தாமரைகளால் ஆறுகள் கூவமாக மாறி வருகிறது. நீா்நிலைகளில் தண்ணீா் இருந்தும் எதற்கும் பயன்படாத நிலை தொடா்கிறது.
குறிப்பாக, திருவாரூா்- நாகை மாவட்டங்களில் கடலில் கலக்கும் முள்ளியாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் நிகழாண்டு வடகிழக்கு பருவமழையை எதிா் கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில், முள்ளியாற்றில் திருத்துறைப்பூண்டி-வாய்மேடு இடையே தூா்வாரி சீரமைக்க ஆசிய வளா்ச்சி வங்கி நிதி ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்தும், நிா்வாக காரணங்களால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
முதல்வரின் கவனம் பெறுமா?: விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு, இப்பிரச்னை கொண்டுசெல்லப்பட வில்லையோ என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவி வருகிறது.
எனவே, ஆகாயத்தாமரைச் செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீா்வளத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள், கட்சியினரும் இப்பிரச்னை குறித்து முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.