``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்!
மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேசியக் கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.
இதையும் படிக்க | தில்லியின் அடுத்த முதல்வா் யாா்?பாஜக எம்எல்ஏக்கள் இன்று முடிவு
பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா குரல் கொடுத்தார்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.