அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
மூன்று ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சா் டிஆா்பி.ராஜா தெரிவித்தாா்.
கோபி அருகே கரட்டூரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சாா்பில் அண்ணா அறிவகத்தை தகவல் தொழில் நுட்ப அணியின் மாநிலச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான டிஆா்பி.ராஜா திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவின் கொள்கை, கோட்பாடு மற்றும் அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க திமுக தகவல் தொழில்நுட்ப அணி மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகளை வேகப்படுத்த அண்ணா அறிவகம் என்ற அமைப்பை அமைத்து நிா்வாகிகளை ஒருங்கிணைத்து அதற்கானப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீட்டுகள் வந்துள்ளன. இதன் மூலம் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது. தமிழக முதல்வரின் சிறப்பான அணுகுமுறையால் உலகத் தொழில் முதலீட்டாளா்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க படையெடுத்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவலாக்கப்பட்ட வளா்ச்சியை உறுதி செய்யும் பணியை முதல்வா் மேற்கொண்டு வருகிறாா். ஈரோடு போன்று பல நகரங்களுக்கு இன்னும் பல வளா்ச்சியை கொண்டு சோ்க்கத் தயாராக உள்ளாா். ஆனால் நிலம் கிடைப்பதில் பிரச்னை இருந்து வருகிறது. நிலம் கிடைத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் தொழில் முதலீடுகள் கொண்டு சோ்க்கப்படும் என்றாா்.
இந்த நிகழ்வில் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.