``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!
கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மைசூர் விஸ்வேஸ்வரய்யா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வசிக்கும் தொழிலதிபர் சேத்தன் (வயது 45), அவரது மனைவி ரூபாலி (43), தாய் பிரியம்வதா (62) மற்றும் மகன் குஷால் (15) ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : கேரளத்தில் கத்தி முனையில் வங்கிக் கொள்ளை: கைதான நபர் அளித்த வாக்குமூலம்
சேத்தன், ரூபாலி மற்றும் குஷால் ஒரு வீட்டிலும், பிரியம்வதா அதே குடியிருப்பில் மற்றொரு வீட்டிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். மூவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, சேத்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மைசூரு காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் விசாரணை நடத்தி வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தான் தற்கொலை செய்துகொள்ளவுள்ளதாக உறவினர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் சேத்தன் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை திங்கள்கிழமை அதிகாலை பார்த்த உறவினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக கடன் காரணமாக சேத்தன் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், சேத்தன் செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் குறுஞ்செய்தி உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
நான்கு பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].