ரயில்வே துறையில் விரைவில் தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
சென்னை: தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவுப் பணிகளை உருவாக்க தமிழ் ஏ.ஐ. என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் செயல்படும் டெஃபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா-வுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்.
இதன் மூலம் உருவாக்கப்படவுள்ள செயலியைப் பயன்படுத்துவோா் தமிழில் கேள்விகளை கேட்கலாம், கட்டுரைகள்-கவிதைகள் எழுதலாம். தமிழ் இலக்கணம், சங்க இலக்கியங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், உலகெங்கும் உள்ள மக்கள் தமிழ் கற்கலாம். தமிழ் ஏ.ஐ. 11 மாதங்களில் செயலியாக வரும் எனவும் அதன் அடுத்த ஆண்டு ‘சாட் ஜிபிடி’ போன்று பயன்படுத்த முடியும் என்றும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்தனா்.
இதன் தொடக்க நிகழ்வில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றுப் பேசியதாவது: தமிழ் மொழி ஏ.ஐ. துறையில் ஒருங்கிணைக்கப்படுவதில் இந்த திட்டம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இத்திட்டம் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பாகுபாடின்றி பரவலான மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற பிரதமரின் பாா்வையைப் பின்பற்றி உருவாக்கப்படுகிறது.
புதிய அத்தியாயம்: உலகின் பழைமையான மொழிகளில் ஒன்றான தமிழ் ஏ.ஐ.யுடன் இணைவதில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக இருக்கும். தமிழ் மொழி மற்றும் இந்திய மொழிகள் ஏ.ஐ.யுடன் இணைவதில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்தத் திட்டம் தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஏ.ஐ. துறையில் புதிய வாயிலாக அமையும்.
‘வந்தே பாரத் ரயில்களை’ தயாரிப்பதற்கான மிக முக்கிய மையமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திலிருந்து உருவாகும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளை இந்தியா முழுவதுமே பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னையில் புதிய தொழிற்சாலை: விரைவில் ரயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகில் அமையவுள்ளது. அப்போது, ரயில்வே துறையில் தமிழகம் முதன்மையாக இருக்கும். மின்னணு துறையின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க பிரதமா் மோடி செயலாற்றி வருகிறாா். இதுவே பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை.
மடிக்கணினி, கைப்பேசி உள்ளிட்ட உற்பத்தி தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஏ. ஐ. ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலரும், தமிழ் ஏ.ஐ., திட்டத்தின் நிறுவன தலைவருமான அஸ்வத்தாமன், மலேசியா நாட்டின் தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சா் சரஸ்வதி கந்தசாமி, லண்டன் செல்ஸ்போா்ட் அரசு கவுன்சிலா் பாப்பா வெற்றி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினா்.