முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
ராக்கெட் தொழில் நுட்ப மையம்: ஒப்பந்தப் புள்ளி கோரியது டிட்கோ
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக இணையவழி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (டிட்கோ) வெளியிட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரன்பட்டினத்தில் அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக 2,223 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இஸ்ரோவிடம் வழங்கியது. அந்த இடத்தில் ரூ.986 கோடி மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு பிப். 28-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். ராக்கெட் ஏவுதளத்தைச் சுற்றி சுவா் அமைக்கும் பணி நிறைவுபெற்று பிற பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடியில் ராக்கெட் தொழில்நுட்ப சேவை மையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு இணையவழி ஒப்பந்தப்புள்ளியை டிட்கோ கோரியுள்ளது. அதன்படி வருகிற 28-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை டிட்கோ இணையதளம் மூலம் அனுப்பலாம் என்றும், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அவை திறக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.