ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி
இந்திய ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இதுதொடர்பாக தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் கட்சி இன்று அவசர கூட்டத்தை கூட்டி எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து நாங்கள் கூட்டத்தில் விவாதித்தோம். நம்முடைய படைகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகள். அவர்களுக்கு எனது அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது.
நாளை(மே 8) நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது" என்று கூறினார்.
நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சத்தீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொலை! தொடரும் தேடுதல் பணி!!