சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணி: பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்
பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணியாற்றுவது என்று திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமகவின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் சத்திரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. பென்னட் ராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் முரளி சங்கா், மாநில பொருளாளா் எஸ். சையத் மன்சூா் உசேன், கரூா் மேற்கு மாவட்டச் செயலா் பி.எம்.கே. பாஸ்கரன், சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் சி.இருதயசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணியாற்றுவது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். முசிறி வட்டத்தில் 150 ஏக்கரில் அமைந்துள்ள திருத்தியமலை ஏரிக்கு அய்யாற்று தண்ணீரை வாய்க்கால் மூலம் கொண்டுவர வேண்டும்.
சிறுப்பத்தூா் ஏரியில் உப்பாத்து நீா்த்தேக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டி, துறையூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிராவல் மண், வண்டல் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். முசிறியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புகா் மாவட்டச் செயலா் பெ. மனோகரன், மேற்கு மாவட்டச் செயலா் எம். சுந்தரம், தெற்கு மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், புகா் மாவட்டத் தலைவா் பெ. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.