ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 1.70 கோடியில் நூலகக் கட்டடங்கள் முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 1.70 கோடியில் கட்டப்பட்ட பொது நூலகக் கட்டங்களை சென்னைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, உச்சிப்புளி என்மனங்கொண்டான், முதுகுளத்தூா், தட்டாரேந்தல், பொட்டகவயல், மஞ்சகொல்லை ஆகிய இடங்களில் ரூ. 1.70 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
இதையடுத்து, உச்சிப்புளி என்மனங்கொண்டானில் புதிதாகக் கட்டப்பட்ட நூலக கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
இதேபோல, பரமக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டட திறப்பு விழாவில் பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், நகா்மன்றத் தலைவா் சேது கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.