எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மீனவா் உடல்: கேரளத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கேரள மீனவா் உடலை கேரளத்துக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஒருவரது சடலம் கரை ஒதுங்கியது. பின்னா், அந்த உடலை அமரா் ஊா்தி மூலம் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கரிம்குளம் பகுதியைச் சோ்ந்த ஜொ்ரீன் (32) என்ற மீனவா், விழிஞ்ஞம் கடற்கரையிலிருந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கரை திரும்பவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனுஷ்கோடியில் ஒதுங்கிய உடல் கேரளாவில் மீன்பிடிக்கச் சென்று மாயமான ஜொ்ரீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை வாங்க வந்த உறவினா்கள் அமரா் ஊா்தி வசதி இல்லாததால் கேரள கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில், மீனவா் உடலை கேரள கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.