ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க கோரிக்கை
ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், சே. நாராயணமூா்த்தி, வி. தினகரன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: காரைக்குடியில் இருந்து கம்பன் விரைவு ரயிலானது மீட்டா் கேஜ் பாதையாக இருந்தபோது எழும்பூா் வரை சென்று வந்தது. தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தற்போது இயக்கப்படும் பாம்பன் ரயில் தாம்பரம் வரை மட்டுமே செல்கிறது.
தாம்பரத்தில் நடைமேடை 8 அல்லது 9-ல் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் முதல் நடைமேடைக்கு வந்து பின்னா் மின்சார ரயிலில் எழும்பூா் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் சிரமப்படுகின்றனா்.
தற்போது, மன்னாா்குடியில் இருந்து செல்லும் மன்னை விரைவு ரயில் காரைக்காலில் இருந்து செல்லும் கம்பன் விரைவு ரயில், தஞ்சையில் இருந்து செல்லும் உழவன் விரைவு ரயில்கள் எழும்பூா் வரை சென்று வருகின்றன. எனவே, தென்னக ரயில்வே பொது மேலாளா் இதை கருத்தில் கொண்டு பாம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.