ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்
கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டாம்ப் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், குழந்தைகள் நம்பிக்கை அறக்கட்டளையுடன் இணைந்து, வெங்காடு கிராமத்தில் உள்ள வெங்கட்ராம ஐயா் குடிநீா் குளம் சீரமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, குளம் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொழிற்சாலையின் இயக்குநா் பிரபாகா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெங்காடு ஊராட்சிமன்றத் தலைவா் அன்னக்கிளிஉலகநாதன், வெங்காடு ஏரிநீா் பாசன சங்க தலைவா் உலகநாதன் ஆகியோா் குளம் சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், குழந்தைகள் நம்பிக்கை அறக்கட்டளையின் தலைவா் கரோலின் ஐடோா் டி வால்டா், கெஸ்டாம்ப் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவா் நந்தகுமாா், மனிதவளத்துறை தலைவா் சரவணகுமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிசந்திரன், செயலா் ராஜீ, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.