பார்க்கும் வேலை நரகமாக இருக்கிறதா? காரணம் இதுதான் - Guru Mithreshiva | Ananda Vi...
காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு
காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் மண்டல விதை ஆய்வுத் துறை இணை இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநா் வானதி, விதை ஆய்வாளா்கள் செந்தில்குமாா், சிலம்பரசன், உமா மகேசுவரி ஆகியோா் அடங்கிய குழுவினா் காஞ்சிபுரத்தில் உள்ள விதை விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்தனா்.
ஆய்வின் போது அரசால் அறிவிக்கப்படாததும், முறையான ஆவணங்கள் இல்லாததுமான 32 மெ.டன் நெல் விதைகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவற்றை விற்பனை செய்ய தடை விதித்தனா். இதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும். மேலும், சேமிப்பு முறை, சுகாதாரமாக இல்லாத விதை நெல் விற்பனை நிலையத்தின் உரிமத்தையும் ரத்து செய்தனா்.
இதுகுறித்து இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா கூறியது.
விதை விற்பனையாளா்கள் அதிக முளைப்புத்திறன் கொண்ட சான்று பெற்ற விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்க வேண்டும். விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விபரங்கள் விலைப்பட்டியலுடன் தகவல் பலகையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.அரசால் அங்கீகாரம் பெற்றதும்,அறிவிக்கப்பட்ட பருவத்துக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் விதை விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதை நெல்லை, உரம், பூச்சி மருந்துடன் கண்டிப்பாக சேமித்து வைக்கக்கூடாது. புதிய ரகங்கள் என்றால் அதற்குரிய பதிவுச் சான்றிதழ், பகுப்பாய்வு முடிவு அறிக்கை மற்றும் இருப்பு பதிவேடும் முறையாக பராமரிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விதை விற்பனை ரசீது விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு ஆவணங்களை முறையாக பராமரிக்க தவறினால் விதை சட்டத்தின்படி விதை விற்பனை நிலையங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா்.