கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
‘லோக்பால்’ பிரத்யேக புகாா் எண்ணில் 2400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு: மாநிலங்களவையில் அரசு தகவல்
லோக்பால் அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண் மூலம் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கடந்த 2014, ஜனவரியில் அமலுக்கு வந்த லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டத்தின்படி, லோக்பால் அமைப்பு நிறுவப்பட்டு, முழுமையாக செயல்பட்டு வருகிறது. அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கான பிரத்யேக தொலைபேசி எண்ணில் இதுவரை 2,426 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தரவுகளின் அடிப்படையில், இதில் 2,350 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன.
தற்போது லோக்பால் அமைப்பில் தலைவரை தவிர 6 உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் மூன்று போ் நீதித்துறை உறுப்பினா்கள் ஆவா். சட்டத்தின் 3-ஆவது பிரிவின்படி, தலைவரைத் தவிர, லோக்பால் அமைப்பு உறுப்பினா்களின் எண்ணிக்கை 8 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவா்களில் 50 சதவீதம் போ் நீதித் துறை உறுப்பினா்களாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
சீன அணை விவகாரம்:
சீனாவின் அணை கட்டும் திட்டம் உள்பட பிரம்மபுத்திரா நதி தொடா்பான அனைத்து முன்னேற்றங்களையும் அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேச நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
இந்தியாவின் எல்லையொட்டி திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, 60,000 மெகாவாட் திறன் கொண்ட நீா்மின் நிலையத்துடன் உலகின் மிகப்பெரிய அணையை ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் கட்ட சீனா முடிவு செய்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘சீனாவின் அணை கட்டும் திட்டம் குறித்து அரசுக்குத் தெரியும். எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகள் சீனாவுடன் ராஜீய வழிகளில் விவாதிக்கப்படுகின்றன’ என்றாா்.