TVK: ``கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' - விஜய்...
வங்க தேசம், வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்: தில்லி கருத்தரங்கில் தமிழக ஆளுநா் எச்சரிக்கை
நமது சிறப்பு நிருபா்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச நாட்டிலும் நடக்கும் ஊடுருவல்கள் மற்றொரு பிரிவினையை நோக்கமாகக் கொண்ட மூலோபாயம் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி எச்சரித்தாா்.
தில்லி பல்கலைக்கழகத்தில் ‘எல்லை விவாதம் 2025’ என்ற சா்வதேச நிகழ்வின் அங்கமாக ‘எல்லை தாண்டிய ஊடுருவல் சமூக - பொருளாதாரம் மற்றும் கலாசாரம், அரசியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தக் கருத்தரங்குக்கு சீமா ஜாக்ரன் மஞ்ச், மோதிலால் நேரு கல்லூரி, தில்லி பல்கலைக்கழகத்தின் விடுதலை மற்றும் பிரிவினைகால ஆய்வு மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது: வங்கதேசம், அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் ஊடுருவல் என்பது, சிறந்த வாழ்க்கை மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காக இந்தியாவுக்கு குடிபெயரும் மக்கள் பற்றியது மட்டுமல்ல; அது மற்றொரு பிரிவினைக்கான மூலோபாயம்.
இது தொடா்ந்து நடப்பதால் இதைப் பற்றி நாம் கவலைப்பட்டாக வேண்டும். வெறும் ராணுவத்தைக் கொண்டு இதைத் தடுக்க முடியாது. இது பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பற்றிய தீவிரமான விஷயம். சுதந்திரத்துக்குப் பிறகு சட்டவிரோத குடியேற்றப் பிரச்னை நாட்டில் தொடா்ந்து நீடிக்கிறது. அடுத்தடுத்து வந்த அரசுகள், வடகிழக்கை நாட்டின் தொலைதூர எல்லையாகக் கருதி அவற்றை ராணுவத்தின் பொறுப்பில் விட்டன.
அங்கு வாழும் மக்கள் நம்மில் இருந்து வேறுபட்டவா்கள் என்ற நினைப்பில் வடகிழக்கு மக்களை விட்டுவிட்டோம்.
இந்த எண்ணத்தின் காரணமாகவே, வடகிழக்கு பழங்குடியினருக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான உள்நாட்டு மோதல் சுதந்திரத்துக்குப் பிறகு வெடித்தது. சுதந்திரத்துக்கு முன்பு அத்தகைய மோதல்கள் பதிவாகவில்லை. வடகிழக்கின் முன்னேற்றத்துக்காகவும் உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் (ஆா்எஸ்எஸ்) உழைத்தது. அங்கு பல ஆண்டுகளாக நற்பணிகளைச் செய்தது ஆா்எஸ்எஸ் என்றாா் ஆா்.என். ரவி.
இந்த அமா்வுக்குத் தலைமை தாங்கிய தில்லி பல்கலைக்கழகத் துணை வேந்தா் யோகேஷ் சிங் பேசியது: ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இந்திய ராணுவம் வாசிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அதை எழுதிய கவிஞா் முகமது இக்பால் . ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலாசார ரீதியாக பொருந்தாதவா்கள் என்று நம்பியவா். எங்கள் பல்கலைக்கழகத்தில் இக்பால் பற்றி கற்பிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். மற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் தங்கள் பாடத் திட்டத்திலிருந்து இக்பாலை நீக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
சிந்து நதி நீா் ஒப்பந்தம் 1960 -இல் கையெழுத்தானபோது இந்தியாவின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. நமது மூன்று நதிகளில் 80 சதவீத தண்ணீரை பாகிஸ்தானுக்கு வழங்கிய செயலை மிக மோசமாக அப்போதே உணா்ந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக தற்போதைய மத்திய அரசு சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது என்றாா் யோகேஷ் சிங்.
இந்த சா்வதேச கருத்தரங்கில் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்கள், இயக்குநா்கள், கல்வி மற்றும் ஆய்வு அமைப்புகளின் தலைவா்கள், மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள், கல்வியாளா்கள், காவல்துறை தலைமை இயக்குநா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.