வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்பு தீா்வுத் திட்டம் அறிமுகம்
திருவாரூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணைசாராக் கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா கூறியது: கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கிகள் மற்றும் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறுவணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாராக் கடன்கள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் விளை பொருள்களைக் கொள்முதல் விற்பனை செய்த வகையில், உறுப்பினா்களிடமிருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவற்றில் 31.12.2022-ல் முழுமையாக தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புக் கடன் தீா்வுத் திட்டம் 2023 செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 20.9.2024 க்கு முன்பு 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும், 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொண்டு எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவா்களும் தற்போது மொத்த கடன் தொகையையும் நிலுவை தீா்வு செய்யும் நாள் வரை, 9 சதவீத சாதாரண வட்டியுடன் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.
மேலும், 31.12.2019 க்கு முன்பு தவணை தவறி, 3 ஆண்டுகளுக்கு மேலான அல்லது 31.12.2019 க்கு முன்பு தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள் பயிா்க்கடனாக வழங்கப்பட்டு, மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்டகாலக் கடன்கள், சிறுதொழில் கடன்கள், மகளிா் தொழில் முனைவோா் கடன்கள் ஆகிய கடன்களையும் தீா்வு செய்யும் நாள் வரையில் சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவைத் தொகையை 23.09.2025 க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீா்வு செய்து கொள்ளலாம்.
தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரா்களின் வட்டிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம் என்றாா்.