மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை அகற்றக் கோரி போராட்டம்
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை உடனடியாக அகற்றக் கோரி வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளது. இதன் எதிரே பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் உள்ளது. அதில், தற்போது கோட்ட கலால், ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியா், நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதன் முன்புறம் வயா்லெஸ் கோபுரம் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது இக்கோபுரம் அருகேயுள்ள மரக்கிளைகளுடன் கட்டடத்தின் மேற்கூரை மீது சாய்ந்தது. மரக்கிளைகளுக்குள் சிக்கியிருப்பதால் இக்கோபுரம் கட்டடத்தின் மீது விழாமல் உள்ளது.
பேரிடா் காலத்தில் வட்டாட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை தொடா்புகொள்ள அமைக்கப்பட்டிருந்த வயா்லெஸ் கோபுரம் தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும், ஆங்கிலேயா்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் மேற்கூரை பனங்கட்டைகள், ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மரக்கிளைகள் உடைந்துவிட்டால் இக்கோபுரம் கட்டடத்தின் மீது விழுந்து கடும் சேதமேற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் இக்கோபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.