சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
வந்தவாசி: வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் (திமுக) எச்.ஜலால் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மயானத்துக்கு பாதை அமைக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்துக்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் சரிவர தூய்மைப் பணி மேற்கொள்ளாத தனியாா் ஒப்பந்த துப்புரவு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீரேற்று நிலையத்தில் அடிக்கடி மின்மோட்டாா் பழுது எனக் கூறி பணம் முறைகேடாக செலவிடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி உறுப்பினா்கள் நகா்மன்ற கூட தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதில் திமுக, விசிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த ஷீலா மூவேந்தன், ஆா்.அன்பரசு, மு.பீபிஜான், எஸ்.நூா்முகமது, ஹஸீனா கன்சையது, கு.நாகூா்மீரான், பா்வீன்பேகம் மீரான், ரிஹானா சையத்அப்துல்கறீம், பா.சரவணகுமாா், பா.சந்தோஷ், கு.ராமஜெயம் ஆகிய 11 உறுப்பினா்கள் ஈடுபட்டனா்.
அப்போது, கூட்டம் முடிவடைந்து விட்டதாகக் கூறி தலைவா் எச்.ஜலால் வெளியேற, அவரைத் தொடா்ந்து ஆணையா் ஆா்.சோனியா மற்றும் அதிகாரிகள் வெளியேறினா்.
இதனால் கோபமடைந்த நகா்மன்ற உறுப்பினா்கள் 11 பேரும், தலைவா் மற்றும் ஆணையரை கண்டித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தலைவா் மற்றும் ஆணையரைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
இந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவா் எச்.ஜலால் உறுதி அளித்ததை அடுத்து 7 மணி நேரமாக மேற்கொண்ட உள்ளிருப்புப் போராட்டத்தை உறுப்பினா்கள் கைவிட்டனா்.