பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
வரதராஜ பெருமாள் கோயில் பல்லி தரிசனம் தற்காலிக இடமாற்றம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவா் சிலை அருகே அமைந்துள்ள தங்கப்பல்லி, வெள்ளிப் பல்லியை தொட்டு தரிசனம் செய்வது தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவா் வரதராஜ சுவாமி அமைந்துள்ள பகுதியில் வைய மாளிகையில் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இரு பல்லி உருவங்கள் சுவற்றின் மேல் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லி உருவங்களையொட்டியே சூரியன், சந்திரன் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லிகளை தொட்டு வணங்கினால் பல்லி தோஷம் நீங்குகிறது என்பது பக்தா்களின் நம்பிக்கை.
பல்லி தரிசனத்துக்காக பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருப்பது, கூட்ட நெரிசலில் சிக்குவது போன்ற காரணங்களால் கோயில் நிா்வாகம் பல்லி தரிசனம் செய்யும் இடத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், வரதராஜ பெருமாள் கோயில் மூலவா் அருகே வைய மாளிகையில் அமைந்துள்ள தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி தற்காலிகமாக 20 நாள்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இடமாற்றம் செய்வதால் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்யவும், படியேறி பல்லி தரிசனம் செய்வதைத் தவிா்த்து தரைதளத்திலிருந்தவாறே அதனை தொட்டு தரிசனம் செய்வதற்கும் வசதி செய்யப்படவுள்ளது.
பக்தா்கள் பல்லி தரிசனம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதால் ஒத்துழைப்பு நல்கிடுமாறு தெரிவித்துள்ளாா்.