வாணியம்பாடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
வாணியம்பாடி நகராட்சி சந்தை வளாகத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டநகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தின் கீழ் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இது பழைமையான கட்டடமாக இருந்ததால், புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என கோரினா். இந்நிலையில், 15-ஆவது நிதிக்குழு பொது சுகாதார மானியத்தின் கீழ் ரூ.1.2 கோடி ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
மண்டலவாடியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் காணொலி மூலம் புதிய கட்டடத்தை முதல்வா் திறந்து வைத்தாா். பின்னா், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் தலைமையில் ஆணையா் ரகுராமன், துணைத் தலைவா் கயாஸ்அகமது, சுகாதார அலுவலா் அப்துல் ரகீம் மற்றும் மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.