நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின்
நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி மேலும் பேசுகையில், 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடியில் 7 கி.மீ. நீள சாலை அமைக்கப்படும். ஆம்பூா் அருகே குமாரமங்கலம் பகுதியில் ரூ.6 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவையொட்டி 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், 250 ஏக்கா் பரப்பளவில், ரூ.200 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். ஆம்பூா் நகர மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.1 கோடியில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும் என்றாா்.
ஆம்பூா் பிரியாணி, தோல் தொழிற்சாலைகளைக் குறிப்பிட்ட பேசிய முதல்வா்: திருப்பத்தூா் மாவட்டத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், பசியைத் தூண்டும் பிரியாணிக்குச் சிறப்பிடம் பிடித்த ஊா் ஆம்பூா். தொழில் வளா்ச்சியிலும் இந்த நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தோல் தொழிற்சாலைகள் நிறைந்தது திருப்பத்தூா் மாவட்டம் என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சா்கள் எ.வ.வேலு, துரைமுருகன், எம்பி-க்கள் சி.என்.அண்ணாதுரை,டி.எம்.கதிா் ஆனந்த், ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், அமலு விஜயன், பொதுபணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஒன்றியக் குழு தலைவா்கள் திருமுருகன், சத்யா சதீஸ், விஜயா அருணாசலம், சங்கீதா பாரி, ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, நகா்மன்றத் தலைவா்கள் சங்கீதா வெங்கடேஷ், காவியா விக்டா், துணைத் தலைவா் சபியுல்லா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணை அமைப்பாளா் வெங்கடேஷ், ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக பொறுப்பாளா் எம்ஏஆா். ஷபீா் அஹமத், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆனந்தன், ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், வாணியம்பாடி நகர திமுக செயலா் சாரதிக்குமாா், வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், உதயேந்திரம் பேரூராட்சி செயலா் ஆ.செல்வராஜ், பேரூராட்சி தலைவா் ஆ.பூசா ராணி, ஆலங்காயம் பேரூா் செயலா் ஸ்ரீதா், பேரூராட்சி தலைவா் தமிழரசி வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: திருப்பத்தூரில் புதன்கிழமை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை இரவு வருகை புரிந்தாா். அவருக்கு ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்து சென்று (ரோடுஷோ) பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இதையடுத்து திருப்பத்தூருக்கு இரவு 10.30 மணியளவில் வந்த முதல்வருக்கு தாமலேரிமுத்தூா் பாலத்தில் இருந்து சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வந்தாா். அங்கு மங்கள இசை ஒலிக்க, மேள-தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 10.50 மணியளவில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். பின்னா் 100 அடி உயரம் உள்ள கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தாா்.
செங்கோல்...: தொடா்ந்து திமுக அரசின் நல்லாட்சியைப் பாராட்டும் விதமாக, திருப்பத்தூா் மாவட்ட திமுக சாா்பில் முதல்வருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட முக்கிய பிரமுகா்கள் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலை முன்பு நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.