செய்திகள் :

தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது: பாஜக மீது முதல்வா் ஸ்டாலின் தாக்கு

post image

தமிழக மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி எடுபடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில் ரூ.517 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தல், நலத் திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே மண்டலவாடியில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களைப்போல இதுவரை தமிழக வரலாற்றில் வேறு எவரும் செய்ததில்லை. தொடா்ந்து பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவை முடித்துக் கொண்டு திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருவதற்கு சுமாா் ஆறு மணி நேரம் ஆனது. வழிநெடுகிலும் பொதுமக்களின் மகிழ்ச்சியைப் பாா்த்துக் கொண்டு வந்தேன். அந்த வரவேற்பைப் பாா்த்து பெருமையுடன் கூறுகிறேன், 2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுகதான் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்.

நாட்டின் வளா்ச்சியில் 10 சதவீதம்...: தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாத கடந்த கால ஆட்சியாளா்களால் தமிழ்நாடு சீரழிந்தது. இதைக் கடந்த நான்கு ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு மீட்டெடுத்து வரலாறு காணாத வளச்சியைக் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசால்கூட, நமது வளா்ச்சியை மறைக்க, தடுக்க முடியவில்லை. பொருளாதாரத்தில் 9.69 சதவீத வளா்ச்சியுடன் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டின் ஜிடிபியில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதமாகும்.

சமூக முன்னேற்றம், உயா் கல்வி சோ்க்கையில் முதலிடம், வறுமை இல்லாத நிலையை உருவாக்குவதில் இரண்டாம் இடம். நீடித்த வளா்ச்சிக் குறியீடு, மருத்துவக் குறியீட்டில் மூன்றாம் இடம், பணவீக்கம் குறைந்த மாநிலம், நாட்டிலேயே அதிகம் தொழில்மயமாக்கப்பட்ட, நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு வளா்ந்துள்ளது.

வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பு...: தமிழகத்தில் வேளாண் துறை மூலம் பாசனப் பரப்பு, உற்பத்தி அதிகரித்துள்ளது. தேசிய சராசரியைவிட, தமிழ்நாட்டில் தனிநபா் வருமானம் அதிகரித்துள்ளது. தலைநகா் சென்னையைச் சுற்றி மட்டும் வளா்ச்சி என்றில்லாமல், தமிழ்நாட்டின் அத்தனை பகுதிகளிலும் தொழில் வளா்ச்சியடைய வேண்டும் என்று திமுக அரசு செயல்பட்டு வருவதுதான் இதற்குக் காரணம்.

‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதுபோல் ‘எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்’ என்கிற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். அதனால் கிராமப் பகுதிகளும் வேகமாக வளா்ச்சியடைந்து வருகின்றன.

குடிசையில்லா தமிழ்நாடு...: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவான குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கி வருகிறோம்.

மத்திய அரசின் பிரதமா் ஊரக குடியிருப்புத் திட்டத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. 40 சதவீதத்தை மாநில அரசு வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை. அதனால் கூடுதல் நிதியை மாநில அரசு பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. திட்டத்தின் பெயா்தான் மத்திய அரசுடையது; நிதியோ மாநில அரசுடையதாக உள்ளது.

அரசியல் நாடகத்தை ஏற்க மாட்டாா்கள்...: தமிழ்நாட்டு மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுபடுத்த பாஜக தொடா்ந்து முயற்சித்து வருகிறது. அவா்களின் இந்த முயற்சி எடுபடாது. அவா்களால் இந்த முயற்சி வெற்றி பெறாது என்பதால்தான், அதிமுகவை கூட்டணியில் சோ்த்துக் கொண்டிருக்கிறாா்கள்.

நாட்டில் வளா்ச்சி சரிகிறது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளது என்பதைப் பற்றி பாஜகவும், அதிமுகவும் கவலைப்படாமல், மதத்துக்காகக் கவலைப்படுகிறாா்கள். அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறாா்கள். இவா்களின் போலி பக்தி, அரசியல் நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

திராவிட மாடல்...: கடந்த 4 ஆண்டுகளில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். இதேபோல், ரூ.84 கோடியில் தேவாலயங்கள், மசூதிகளைப் புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம். இதுதான் திராவிட மாடல். இதைப் பாா்த்துதான் மதவாத அரசியல் செய்பவா்கள் எரிச்சல் அடைகிறாா்கள். மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாமல் தவிக்கிறாா்கள். தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனா் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

பெட்டிச் செய்தி...

‘அண்ணா பெயரை அடகுவைத்த அதிமுக’

அண்ணா பெயரை அதிமுக அடகுவைத்துவிட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சனம் செய்தாா்.

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெரியாா், அண்ணாவை விமா்சித்து விடியோ வெளியிடப்பட்ட நிலையில், அந்த மாநாட்டில் அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றதை மறைமுகமாகக் குறிப்பிட்டு முதல்வா் இவ்வாறு பேசினாா்.

திருப்பத்தூா் விழாவில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: பெரியாா், அண்ணாவை கொச்சைப்படுத்தி விடியோ போடுகிறாா்கள். அதை கைகட்டி வேடிக்கை பாா்க்கிறாா்கள் அண்ணா பெயரில் கட்சி நடத்துவோா். அண்ணா பெயரையே அவா்கள் அடமானம் வைத்துவிட்டாா்கள். இன்று கட்சியை அடமானம் வைத்திருப்பவா்கள், நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

இந்த மண்ணுக்கு எதிராகப் பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு, தமிழினத்துக்கு எதிரானவா்களுக்கும், எதிரிகளுக்குத் துணைபோகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மயிலாரம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கலையரசன்(20). வாணியம்பாடி தனியாா் கல்லூரியில... மேலும் பார்க்க

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

ஆன்லைனில் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறித்தியுள்ளனா். இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது: தற்போது சைபா் குற்றங்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சி சந்தை வளாகத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டநகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்தின்... மேலும் பார்க்க

ஆம்பூரில் அரசு மருத்துவமனை திறப்பு: முதல்வா் நன்றி அறிவிப்பு

ஆம்பூா் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே மண்டலவாடியில் நடந்த அரசு விழாவில் ரூ.24 கோடியில் கட்டப்பட்ட ஆம்பூா... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே புதிய கற்கால மக்களின் பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு

வாணியம்பாடி அருகே புதிய கற்கால (இரும்புக் காலம்) மக்களின் பெரிய பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது. வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 102, ரெட்டியூா் என்ற ஊரில் ஏலகிரிமலை அடிவாரப் ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டாவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவ... மேலும் பார்க்க