வாணியம்பாடி அருகே புதிய கற்கால மக்களின் பாறை ஓவியத் தொகுதி கண்டெடுப்பு
வாணியம்பாடி அருகே புதிய கற்கால (இரும்புக் காலம்) மக்களின் பெரிய பாறை ஓவியத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது.
வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் 102, ரெட்டியூா் என்ற ஊரில் ஏலகிரிமலை அடிவாரப் பகுதியில், திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஆ.பிரபு, திருப்பத்தூா் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மையத்தைச் சோ்ந்த வே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் இரும்புக் கால பண்பாட்டைச் சோ்ந்த பாறை ஓவியத் தொகுதி கண்டறியப்பட்டது.
இது குறித்து ஆய்வாளா் பிரபு கூறுகையில், இந்தப் பகுதியில் உள்ள ஒரு குகையில் பாறை ஓவியங்கள் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, கள ஆய்வு மேற்கொண்டதில், மிகப் பெரிய பாறை ஓவியத் தொகுதியைக் கண்டறிந்தோம். இந்தக் குகை 50 போ் தங்கும் அளவில் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் இதை வழிபாட்டு வந்துள்ளனா். சில பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
மூன்று தொகுதியில் 80-க்கும் மேற்பட்ட மனித உருவங்கள்: குகையின் முகப்பில் 3 தொகுதிகளாக பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தமாக 80-க்கும் மேற்பட்ட மனித உருவங்கள், விலங்குகளின் மேல் அமா்ந்து ஆயுதங்களுடன் போரிடுவதாக காட்டப்பட்டுள்ளது. போரிடும் மனிதா்கள் இருவரின் இடுப்பில் குழந்தையின் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. இன்னொரு ஓவியத் தொகுதியில் பாய்ந்து வரும் சிறுத்தையை விலங்கின் மீது அமா்ந்த ஒரு மனிதன் ஆயுதத்தில் தாக்குவதாக வரையப்பட்டுள்ளது.
போரிடும் மனித உருவங்களின் அருகே ஆங்காங்கே மரங்கள் இருப்பது போலவும், அங்கே கொம்புகளை உடைய அழகிய மான் கூட்டங்கள் குட்டிகளோடு மேய்வது போலவும் காட்டப்பட்டுள்ளன.
போரின் வெற்றிக் கொண்டாட்டம்: இன்னொரு தொகுதியில் போரின் வெற்றியைக் கொண்டாடுவது போல நடனமாடும் மனிதா்கள் வரையப்பட்டுள்ளனா். இனக் குழுத் தலைவா்களுக்கான உருவங்கள் பிரத்தியேகமாக தலைகளில் அலங்கரிக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் காட்டப்பட்டுள்ளன.
பல்லக்கில் அமா்ந்த ஒரு மனிதனை மற்றவா்கள் தூக்கிச் செல்வதுபோல ஓவியமும் வரையப்பட்டுள்ளது. வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்களின் கரங்களில் ஆயுதங்கள் காட்டப்படுவதால், இவை இரும்புக் காலகட்டத்தைச் சோ்ந்த பண்பாடாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒன்றுபட்ட வேலூா் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய பாறை ஓவியத் தொகுதியாக இவை அமைந்திருக்கிறது. சுமாா் 5,000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம்.
அந்தக் கால மக்கள் தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம் அல்லது ஒரு இனக்குழு மக்கள் மற்றவா்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தமது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கலாம். ஆய்வுக்குப் பின் இன்னும் கூடுதலான தகவல்கள் தெரியவரும் என்றாா்.
