கரீபியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
விபத்தில் சிக்கிய இளைஞா் முளைச் சாவு: உடல் உறுப்புகள் தானம்
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவா் மூளைச் சாவு அடைந்தாா். இவரது உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி வியாழக்கிழமை சென்ற தனியாா் பேருந்து ஊத்துக்குளி, சாம்ராஜ்பாளையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊத்துக்குளி அருகே சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, ஊமச்சிவலசு பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து - அனிதாராணி தம்பதியின் மகன் குருராஜ் (19) மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து குருராஜின் கண், இதயம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து அவரது உடல் கோவையில் இருந்து சொந்த ஊரான ஊமச்சிவலசு பகுதிக்கு அடக்கம் செய்வதற்காக அவிநாசி வழியாக கொண்டு செல்லப்பட்டது.
இதையறிந்த அவிநாசி பகுதி பொதுமக்கள், தன்னாா்வலா்கள், சமூக அமைப்பினா் உள்ளிட்டோா் குருராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். மேலும் ஊமச்சிவலசு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட குருராஜின் உடலுக்கு கோட்டாட்சியா் மோகனசுந்தரம் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், குன்னத்தூா் போலீஸாா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.