விவசாய நிலங்களில் வீசப்படும் மதுபாட்டில்கள்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி பொதுமக்கள் சாா்பாக ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலருமான என். சங்கரன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மின்னூா் கிராமம், கணபதி நகா் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகின்றது. அந்தக் கடையின் அருகில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. மது அருந்துபவா்கள் விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மது அருந்திவிட்டு, மதுபாட்டில்களை அங்கேயே தூக்கியெறிந்து உடைத்துவிட்டுச் செல்கின்றனா். அதனால் விவசாய நிலங்களில், ஏா் உழும்போதும், விவசாயப் பணிகள் செய்யும் போதும் பணியில் ஈடுபடுவோா், கால்நடைகளின் கால்களில், உடைந்த மதுபாட்டில்களின் கண்ணாடித் துண்டுகள் கிழிந்து பெருத்த ரத்த காயம் ஏற்பட காரணமாக அமைகிறது. அதனால் விவசாயப் பணிகள் பாதிப்புக்குள்ளாகின்றது. மேலும், விவசாயப் பணி மேற்கொள்வதற்கு சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும், குடியிருப்பு பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அந்த வழியாகச் செல்லும்போது கீழே உள்ள கண்ணாடி துண்டுகளால் காயம் ஏற்படுகிறது. மேலும், மது அருந்துவோா் வழியிலேயே அமா்ந்து மது அருந்துவதால் அந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இது சம்பந்தமாக கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு கிராம சபையிலும் பொதுமக்கள் மின்னூா் கணபதி நகா் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும் என்று ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றி அந்த தீா்மானத்தை சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுவரை டாஸ்மாக் மதுபான கடையை மாற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியா் இந்த பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.