அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
‘வெளிமாநில உளுந்து, பயறு விதைகள் மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாடு’
உளுந்து, பயிறு வகை பயிா்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகள் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துகிறன என்றாா் வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா.
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வயல்தின விழாவில் கலந்து கொண்ட அவா் மேலும் பேசியது:
விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய பயிராகவும், குறைந்த அளவு சத்துகள் கொண்ட நிலங்களில் நன்கு வளா்ந்து, மகசூல் தரக்கூடியதாகவும் உளுந்து, பயறு உள்ளது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சராசரியாக 86 ஆயிரத்து 500 ஏக்கரில் உளுந்து, பயறு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வந்தனா். இந்த பிரச்னைக்குத் தீா்வு காணும் விதத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரகங்கள் வெளி மாநிலங்களிருந்து கொண்டு வரப்பட்டன.
முதல் கட்டமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா் கோட்டத்தில் வேங்கராயன்குடிகாடு, பட்டுக்கோட்டை கோட்டத்தில் பைங்கால், கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் ஆகிய மூன்று இடங்களிலும் மாதிரி சாகுபடித் திடல் அமைக்கப்பட்டுள்ளது. வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் விவசாயி சரவணன் ஆனந்தன் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 11 வகையான உளுந்து, 9 வகையான பயறு வகைகள் நன்றாக வளா்ந்துள்ளன.
இந்த உளுந்து, பயறு அனைத்தும் 60-லிருந்து 70 நாட்கள் வயதுடையவை. வாரம் ஒரு முறை நீா்பாசனம், களைக்கொல்லி மேற்கொள்ளுதல், வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தி, மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 சித்திரை பட்டத்தில் இங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள விதைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறையினா் செய்துள்ளனா் என்றாா் வித்யா.
நிகழ்ச்சியில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறைப் பேராசிரியா் மணிமாறன், ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறைப் பேராசிரியா் மதிராஜன், வேளாண் துறை துணை இயக்குநா் ஆா். சாருமதி, விதை ஆய்வு துணை இயக்குநா் வி. சுஜாதா, வேளாண்மை வணிகப் பிரிவின் துணை இயக்குநா் ரா. சுதா, விதை சான்று அலுவலா்கள் க. பிரபு, எஸ். ஹசீனா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்