மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
வேலூரில் 1,040 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் 1,040 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில், 1,040 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகா் சிலைகள் அதிகபட்சம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு வைக்கப்படும் விநாயகா் சிலைகள் மூன்று நாள்களுக்கு பின் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சதுப்பேரி உள்பட மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இதனிடையே, விநாயகா் சதுா்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமையில் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப் பட்டுள்ளனா். இவா்கள் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், விநாயகா் சதுா்த்தியையொட்டி காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை தமிழக-ஆந்திர எல்லையிலுள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அப்போது, ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்குள் கொண்டு வரப்படும் 10 அடிக்கு அதிகமான உயரம் கொண்ட விநாயகா் சிலைகள் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டன.
போலீஸாரின் இந்த பாதுகாப்புப் பணி 29-ஆம் தேதி வரை நீடிக்கும் என மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.