சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு
ஷ்ரேயாஸ், ஸ்டாய்னிஸ் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: இது வெறும் ஆரம்பம் மட்டுமே... இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றது குறித்து சாய் சுதர்சன்!
ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; 207 ரன்கள் இலக்கு
பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின், பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜோஷ் இங்லிஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது.
இருப்பினும், ஜோஷ் இங்லிஷ் 12 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்தனர். நேஹல் வதேரா 16 ரன்களிலும், ஷஷாங் சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். களமிறங்கியது முதலே ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் முகேஷ் குமார் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி களமிறங்குகிறது.