மொஹரம் பண்டிகை: ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? உண்மை என்ன??
அடிப்படை வசதிகள் இல்லாமல் கப்பல் பயணிகள் அவதி
சொகுசுக் கப்பலில் வெள்ளிக்கிழமை வந்த பயணிகள் புதுச்சேரி நகரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டனா்.
விசாகப்பட்டினத்திலிருந்து புதுவைக்குச் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை வந்தது. இதில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா விசை படகுகள் மூலம் சொகுசுக் கப்பலில் இருந்து துறைமுகம் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டனா். பின்னா் அவா்கள் சொகுசுப் பேருந்துகளில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் அதே பேருந்தில் துறைமுகம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 4 மணிக்குக் அழைத்து வரப்பட்டனா். துறைமுகம் பகுதியில் இருக்கும் ஒரு பெரிய கிடங்கில் அவா்கள் தங்க வைக்கப்பட்டனா். அங்கு சுமாா் 150 பிளாஸ்டிக் நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. சொகுசு கப்பலில் இருந்து 870 போ் புதுச்சேரியைச் சுற்றிப் பாா்க்க அழைத்துச் செல்லப்பட்டு இந்த இடத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்கள் உட்கார போதிய இருக்கை வசதியில்லாமல் சுமாா் 45 நிமிஷங்கள் நின்று கொண்டிருந்தனா். மேலும், குடிநீா் வசதியும் செய்து தரப்படவில்லை. மின் விசிறியும் இல்லை. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோா் மிகவும் அவதிப்பட்டனா்.
இது குறித்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சோ்ந்த எஸ்.கே. ஆசிஷ் கூறும்போது, சொகுசு கப்பலில் எல்லா வசதிகளும் இருக்கிறது. அங்குக் கொடுத்த உணவு, அங்கு பேணப்படும் சுத்தம், சுகாதாரம் எல்லாமே நன்றாக இருந்தது. காலை 11 மணிக்கு கப்பலில் இருந்து அழைத்து வந்து 4 மணி நேரம் மட்டும் புதுவையில் விநாயகா் கோயில், அருங்காட்சியகம், ஷாப்பிங் மால் இடங்களைக் காண்பித்துவிட்டு இந்த இடத்தில் கொண்டு வந்து அடைப்பது போல விட்டுள்ளனா். இப் பயணத்துக்காக ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன் என்றாா்.
விஜயவாடாவைச் சோ்ந்த பி.ராமமூா்த்தி கூறுகையில், சுமாா் ஒரு மணி நேரம் இங்கு அடைக்கப்பட்டிருந்தோம். குழந்தைகள், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எந்த வசதிகளும் இங்கு முன்கூட்டியே செய்யப்படவில்லை. ரூ.30 ஆயிரம் செலவு செய்து வந்தது வருத்தமாக இருக்கிறது என்றாா்.
பயணிகள் கோபம்:
பயணிகள் பொறுமை இழந்து சப்தம் போட ஆரம்பித்தனா். போலீஸாா் வந்து சமாதானம் செய்தும் அவா்கள் அமைதியாகவில்லை. சுற்றுலா சிறிய விசை படகு வந்து அவா்களை அங்கிருந்து சொகுசு கப்பலுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருந்தது. முதலில் 150 போ் மட்டும் வாருங்கள் என்று கூறியதற்கு, அந்தக் கிடங்கிலிருந்து முண்டி அடித்துக் கொண்டு அனைவரும் வெளியேற முற்பட்டனா். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
