அன்பில்லா அப்பாவிற்கு! - மகன் பகிரும் வலி | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நான் கைபிடித்து நடக்க ஆசைகொண்ட நேரமெல்லாம் எனக்கு போட்டியாக உன் கரம் பிடித்தது , அந்த நாற்றம் பிடித்த மது குப்பி .. பாடுபட்டு பள்ளிக்கு அனுப்பிவிட்டு பல கோணங்களில் நீ கற்பித்தாய் , அறியா ஆபாச சொற்களை ..
உன் முன்னமர்ந்து வண்டியில் பறக்க ஆசைகொண்டவனுக்கு காண கிடைத்ததென்னவோ , தள்ளாடிய உன் நடையும் , துறு பிடித்து தூக்கி எறிந்த உன் இருசக்கர வாகனமும் , பாவம் அதுவும் உனக்காக காத்திருந்து ஏமாந்ததோ என்னவோ... போதைக்கு அடிமை ஆகிறாய் என தெளிவாய் புரியவைத்தாய்..

பிடித்த திண்பண்டம் கேட்கையில் , உன் மது தீர்ந்து மீந்துபோன பாக்கி பட்டாணியை வீசிவிட்டு நடக்கையில்... சொந்தம் கூடும் நிகழ்வுகளில் , கோமாளியாய் உனை காண்கையில் முதல்முறை வெறுக்க வைத்தாய்...
உடல்நிலை சரியில்லா தாயை இகழ்ந்து , அவள் இயலாமையில் மனம் சிதைந்து , பின் வேறு வழியேதும் இன்றி குழந்தைகளின் உணவு செலவிற்கு உன்னிடமே வந்து நிற்கையில் , அவள் அன்றே இறந்துபோனாள் , பிணம் ஆன பின்னும் எங்களுக்காக மூச்சுவிட்டு நடிக்கிறாள் ... போதை தெளிய நீ பிதற்ற , என் இமைகளின் ஓய்வை ஏனோ கெடுத்தாய் ... இத்தனை கேள்வி கேட்டபின்னும் அந்த
மதுக்குப்பியின் மனம் சற்றும் இலகவே இல்லையே ... என் தந்தையின் உள்ளம்
கவிழ்க்க பயன்படுத்திய வித்தையை என்னிடம் பகிர்வதற்கு!
இப்படிக்கு
ஆனந்.மே
உன் புதல்வன்
