அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கியுள்ளது.
அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து, விமான நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியுள்ளது.
இதில், விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த சில விமானங்களிலும் தீ பரவியுள்ளது. உடனடியாக செயல்பட்டு விமான நிலைய மீட்புக் குழுவினர் தீயை அணைத்தனர்.
சிறிய ரக விமானத்தில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விமான நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த விமானங்களில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
BREAKING: MID-AIR DISASTER ON THE GROUND IN MONTANA
— Mario Nawfal (@MarioNawfal) August 11, 2025
2 planes collided at Kalispell Airport, erupting into a massive fireball.
Details on casualties are still unknown, but rescue crews are flooding the scene in a major emergency response.
Source: @nicksortorpic.twitter.com/wf7CH0gslR
இந்த விபத்து குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.