அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்
சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக மூடுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று ஸ்டாலின் சொல்வாரா?
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை; இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்