இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா
தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆவணி மூலத்திருநாளில் தருமபுரம் ஆதீனத்தில் தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் சிறப்பு புலமை பெற்றுள்ள அறிஞா்களுக்கு 1951-ஆம் ஆண்டுமுதல் பட்டம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு விழா ஆக.31-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. முதல்நாள் நீதி இலக்கிய திருநாளாகவும், இரண்டாம் நாள் காப்பியத்திருநாளாகவும், மூன்றாம் நாள் புராணத்திருநாளாக கொண்டாடப்பட்டது. மேலும், மூன்றாம் நாள் விழாவில், சொக்கநாதா் பூஜை மடத்தில் சிறப்பு வழிபாடும், மாகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சொக்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா். தொடா்ந்து, ஆனந்தம் யூத் பவுன்டேஷன் நிறுவனா் எஸ். செல்வக்குமாருக்கு, அவரது கல்விச் சேவையை பாராட்டி, சமூக சேவா கலாநிதி விருதை வழங்கினாா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமையாதீன அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மாலை நேர கல்லூரிகளில் பயின்ற பயிற்சியாளா்களுக்கு சைவ சித்தாந்தப்புலவா் மற்றும் சைவ சித்தாந்த கலாநிதி என்ற பட்டங்களை வழங்கினாா்.
அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் அருணை. பாலறாவாயன் பிட்டுக்கு மண் சுமந்த படலம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா். இதில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் சபாபதி தம்பிரான் சுவாமிகள், ஆதீன கல்லூரி செயலா் ரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.