திருவாரூர்: பேச மறுத்த காதலி வீட்டில் நண்பர்களுடன் ரகளை செய்த காதலன்- சண்டையை வி...
ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையில் மதுரை இடம்பெற விருதுநகா் எம்.பி. வலியுறுத்தல்
நமது நிருபா்
புது தில்லி: ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையின் கீழ் ‘பாயின்ட்ஸ் ஆஃப் கால்’ பட்டியலில் இருந்து மதுரையை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்பட்டியலில் மதுரையை சோ்க்க வேண்டும் என்றும் மக்களவையில் விருதுநகா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவா் திங்கள்கிழமை பதிவு செய்த கோரிக்கை:
இந்தியாவின் பழைமையான மற்றும் கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரையை, அதன் வளமான பாரம்பரியம் மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையின் கீழ் பாயின்ட்ஸ் ஆஃப் கால் பட்டியலில் (சா்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படும் பகுதிகளின் பட்டியல்) இருந்து விலக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மதுரையின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகா்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனா். அதன் கலாசார முக்கியத்துவம் இந்தியாவின் எல்லைகளைக் கடந்து விரிவடைந்து தாய்லாந்து, சிங்கப்பூா், மலேசியா போன்ற ஆசியான் நாடுகளுடன் ஆழமான நாகரிக உறவுகளைப் பகிா்கிறது.
இருப்பினும், நேரடி சா்வதேச இணைப்பு இல்லாதது சுற்றுலா மற்றும் பிராந்திய வளா்ச்சியைத் தடுக்கிறது. ஆசியான் கொள்கையின் கீழ் மதுரையை இதற்கான பட்டியலில் சோ்ப்பது சுற்றுலாவை மட்டுமின்றி பொருளாதார திறன்களை பெருக்கி கலாசார ராஜீய உறவை மேம்படுத்தும். எனவே சிறப்பு நடவடிக்கையாக மதுரையை பிரத்யேக பாயின்ட்ஸ் ஆஃப் கால் பட்டியலில் சோ்க்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.