ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி: மோகன் பகவத்துக்கு வெள்ளி வேல் பரிசு..! - வேலுமணி சொல்லும் விளக்கம்
ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு விழா மற்றும் பேரூர் முன்னாள் ஆதினம் ராமலிங்க அடிகளார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை ஒட்டி பேரூரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரின் அண்ணா அன்பரசன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வேலுமணி மற்றும் அன்பரசன் சார்பில், மோகன் பகவத்துக்கு வெள்ளி வேல், முருகர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி கலந்து கொண்டது சர்ச்சையானது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “நாங்கள் பேரூர் ஆதீனம் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டோம். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் எங்களை அழைக்க மாட்டார்கள்.

அது வேறு நிகழ்வு. திமுக கையாளாகாத வேலையை காட்டுவதற்கு, ஒரு மகான் நிகழ்ச்சியில் பங்கேற்றதை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி என்று கிளப்பி விட்டுள்ளனர். எடப்பாடி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று மக்கள் மிகவும் தெளிவாக உள்ளார்கள்.
கூட்டணி வேறு கொள்கை வேறு. பாஜக கூட்டணியில் இருக்கும் போது இதெல்லாம் திமுகவுக்கு தெரியாதா. பாஜக கூட்டணியில் இருக்கும் போது திமுக கொள்கையை மாற்றிக் கொண்டார்கள். அதிமுக ஆட்சியில் இருந்த போது சிறுவாணி அணையில் 50 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் 40 அடி தண்ணீர் தான் தேக்கி வருகிறார்கள். இதனால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் தண்ணீரை முறையாக தேக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்றார்.