மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோ...
ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்! அமைச்சர் வெளிநடப்பு!
கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் படம் வைக்கப்பட்டதால், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்துள்ளார்.
கேரள ஆளுநர் மாளிகையின் நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் உருவப்படம் காட்சிப்படுத்தப்படுவதற்கு, முதல்வர் பினராயி விஜயன் கடும் விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் சாரணர் அமைப்பின் சார்பில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் அழைப்பின் பெயரில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயன்படுத்தும் பாரதமாதாவின் படம் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டு, அந்தப் படத்துக்கு ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மலர்தூவி மரியாதைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அரசு நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் படம் காட்சிப்படுத்துவது, ஏற்புடையதல்ல என்று தனது கண்டனங்களைத் தெரிவித்த அமைச்சர் சிவன்குட்டி, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“அங்கு வைக்கப்பட்ட படம் மகாத்மா காந்தி அல்லது பிரதமர் நரேந்திர மோடியுடையாதாக இருந்திருந்தால் கூட அது முறையானதாக இருந்திருக்கக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், ஆளுநர் ராஜேந்த்ர வி. ஆர்லேக்கர் ஆளுநர் மாளிகையை, ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர்; இதுபோன்ற, செயல்கள் மீண்டும் தொடர்ந்தால், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மாநில அரசு புறக்கணிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் சிவன்குட்டி நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததுடன், சீக்கிரம் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும்; இதன்மூலம், அமைச்சர் நெறிமுறைகளை மீறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 5 ஆம் தேதியன்று நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சியில், இதேபோன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தும் பாரதமாதா புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனால், அந்த நிகழ்ச்சியை கேரள மாநில அரசு புறக்கணித்தது.
ஆனால், முதல்வர் பினராயி விஜயன் நேற்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரதமாதா படம் பயன்படுத்தபடாது என ஆளுநர் மாளிகை தனக்கு உறுதியளித்திருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!