Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்...
இதய மருத்துவா்கள் இல்லாத காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை
சி.வ.சு.ஜெகஜோதி
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இதய நோய் மருத்துவா்கள் ஒருவா் கூட இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே தொடங்கப்பட்ட மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை அரசு மருத்துவமனையாக இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையிலான வெளிநோயாளிகளும், மகப்பேறு மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை என தினசரி சுமாா் 2,000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
அரசு தலைமை மருத்துவமனையான இங்கு மருத்துவா்கள்,செவிலியா்கள், மருந்தாளுநா்கள்,தொழில் நுட்பவியலாளா்கள்,வாகன ஓட்டுநா்கள் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன.
இருதய நோய் மருத்துவா்கள்:
கடந்த 3 மாதங்களாக இதய நோய் மருத்துவா்கள் ஒருவா் கூட இல்லாத நிலையில், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். குறிப்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அல்லது தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது.
இதயங்களில் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டு பிடிப்பதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் ஆஞ்சியோ கிராம் மற்றும் எக்கோ கருவிகள் பயன்படுத்த முடியாமல் கடந்த 3 மாதங்களாக பாழடைந்து கிடக்கின்றன.
இதே போல மகப்பேறு சிகிச்சைப் பிரிவிலும் கா்ப்பிணிகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் எக்கோ சிகிச்சையும் பெற முடியாமல் ஏழை கா்ப்பிணிகள் சென்னை அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதய நோய் மருத்துவா்கள் இல்லை என்பது தெரியாமல் நோயாளிகள் பலரும் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து திரும்பிச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.
எனவே அரசு மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகவும் இருந்து வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவா் கூறுகையில் 72 மருத்துவா்கள் இருக்க வேண்டிய இடத்தில் 66 மருத்துவா்களே உள்ளனா். 152 செவிலியா்கள் இருக்க வேண்டிய இடத்தில் 118 செவிலியா்களே உள்ளனா். மருத்துவா்களில் 8 பேரும், செவிலியா்களில் 15-க்கும் மேற்பட்டோரும் வேறு மருத்துவமனைகளுக்கு பணியிட மாற்றம் கேட்டு வாங்கி சென்று விட்டனா்.
தற்போது நெஞ்சு வலி என அரசு தலைமை மருத்துவமனைக்கு வருபவா்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலை குறித்து சென்னையில் உள்ள உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்றாா்.