Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 19 | Astrology | ...
இதற்கு மேலும் மௌனம் சாதிப்பது அழகல்ல! - மகளின் மடல் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எனது அன்புள்ள அப்பா,
வெகு நாட்களாக என் ஆழ்மனதில் தோன்றிய , இருந்த, பகிர நினைத்த, ஆனால் தயங்கிய , ஓப்பு கொள்ள மனமின்றி வரட்டு கவுரவம் தடுத்த எண்ணங்கள்.
சிறு வயதின் முதல் பார்த்த , அனுபவித்த சாதாரணமாய் அன்று மனதில் பட்டவை இன்று ஒரு பெரிய கருவியாய் என்னை வாழ்க்கை பயணத்தில் அழைத்துசென்று அமைதியான வளமான மற்றும் பரோபகாரமாய் இருக்க உதவி செய்த என் அப்பாவின் செயல்கள்.
என்றோ நான் உங்களிடம் வார்த்தையால் பகிர்ந்திருக்க வேண்டும். நீங்கள் எங்களை . விட்டு பிரியும் தருவாயில் கூறி இருக்கலாம்.என்னுடைய எளிதில் ஒப்புக்கொள்ளாத குணமோ தெரியவில்லை.இதற்கு மேலும் மௌனம் சாதிப்பதுஅழகல்ல என்று தோன்றுகிறது..

நான் எழுதும் இந்த கடிதம் உங்களை வந்து சேராது. படிக்க இயலாது. ஆயினும்.. பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி.எனக்கு இருக்கும். என்னுடைய மகிழ்ச்சி என்றுமே உங்கள் விருப்பம் அல்லவா!
மூன்று வயதில் ஒரளவுக்கு நினைவில் நின்றவை. என்னை மடியில் அமர்த்தி. நீங்கள் கூறிய சிறு கதைகள். அடுத்த கட்டத்தில் தெரிந்த பாடல்களை சொல்லி கொடுத்தீர்கள்.எனக்கு அன்றே பாட்டு. படிப்பதற்கான ஆர்வத்திற்கு விதையிட்டீர்.
பள்ளி படிப்பில் அதிகம் கூடமாட உட்கார நேரமில்லை. ஆயினும் என்னுடைய ரிப்போர்ட் கார்டு காண்பித்த போது நீங்கள் அடைந்த மகிழ்ச்சி, பெருமிதம் இன்றும் என் கண் முன்னால்.
கல்லூரியில் நான் சேரும் சமயம் நீங்கள் அறுபதை தொட்டு அலுவலகம் முடிந்து ஒய்வு காலம்.
வேலை சேர்ந்த பிறகுவாய் ஒயாமல் நான் பகிர்ந்த சிறிய அனுபவங்களை சலிப்படையாமல் காது கொடுத்து. கேட்டதை மறக்க முடியுமா?
படித்த குணமுள்ள கணவரை தேர்ந்துஎடுக்க என் விருப்பம் எவ்வளவு முக்கியம் என்று 50 வருடங்கள் முன்பே சுதந்திரம் அளித்தவர் நீங்கள்!

எப்பொழுது எனக்கு உதவி தேவையோ . தயங்காமல் ஒடி வந்ததை சொல்லவா. என் குழந்தைகளுடன் ஒடி ஆடி இருந்ததை. சொல்லவா. என்னுடன் இருக்கும் காலத்தில் நேரம் கழித்து வேலையிலிருந்து நான் வந்தாலும் கண் விழித்திருந்ததை நினைத்தால் இன்றும் கண் கலங்குகிறது.
நீங்கள் செய்தவற்றில் சிலவற்றையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.முழுதும் சொல்லநேரம் போதாது.
நான் அன்று உங்களை எப்படி நடத்தினேன் என்று சற்று நினைத்து பார்க்கிறேன். வளரும் பருவத்தில் சில சமயம் அறிவுரை கூறிய போது அலட்சியப் படுத்தியிருக்கிறேன். பத்தாம் பசலி என்று குற்றம் சொன்னேன்.
சுதந்திரம் அளித்ததாய் நீங்கள் கூறியதை என் உரிமை என்று வாதாடினேன். என்றும் முரண்பாடுகள் இருப்பதாய் தோன்றியது. அன்று. ஆயினும் பிடித்தோ பிடிக்காமலோ நீங்கள் அன்று என்னிடம் காட்டிய கண்டிப்பு நீங்கள் கூறியவற்றை பின்பற்ற வைத்தது.
என்னை வழி நடத்த நீங்கள் காண்பித்த ஒரு சிறு கடுமை. கோபம் அல்ல என்று அன்று . உணரவில்லை. பின்னர் உணர்ந்தும் ஓப்புக் கொள்ள தயக்கம்.
வேலையில் எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் புகழ் !என்னை விடநீங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தீர். உங்களிடம் இருந்து நான் பெற்ற திறமை அல்லவா
உங்கள் 80வது வயதில் எனக்கு உங்கள். அருமை புரிய ஆரம்பித்தது போலும். எங்களுடன் உங்கள் இருவரையும் . கொடைக்கானல் அழைத்து சென்ற போது. எங்களை விட வேகமான நடை துள்ளல். உங்கள் நல்ல ஆரோக்கியத்தின் எதிரொலி்.

90ஐ எட்டும் பொழுது உங்கள் இருவருக்கு முதல் முதலாக பாஸ்போர்ட் எடுத்து உங்கள் மகன் ( என் அண்ணன்) இருக்கும் சிங்கப்பூர் போய்வந்து நீங்கள் அடைந்த மகிழ்ச்சி பெருமை இன்றும் என் கண் முன்னால்.
அந்த வயதிலும் உங்கள்பிறந்த நாளை எதிர்பார்த்து கொண்டாடிய துடிப்பு.
நான் கண்ட ஒரு பலவீனம். வயதாகியும் தோன்றிய உணவு , பொரித்த உணவு. வகைகளை விரும்பி சாப்பிட்டது.
கொஞ்சமாக சாப்பிட்டாலும் ருசி முக்கியம் என்று எண்ணம். உங்களின் ஆரோக்கியம். எதையும் தாங்கியது! தனிமை உங்களை வாட்டவில்லை. பாட்டு , டிவி, சமயம் கிடைத்தால் நண்பர்கள் சந்திப்பு என்று பொழுது போயிற்று.
வாழ்க்கையில் சிறு வயதில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் , கௌரவம் பார்க்காமல் நீங்கள் செய்த வேலைகள். உங்கள் குழந்தைகள். நன்கு முன்னேறிய போது எங்களுக்கு. இயல்பாய் தோன்றியவை உங்களுக்கு. பெரிய சாதனைகளாய் தோன்றியது.
உங்கள் கடைசி காலத்தில் ஒரே நாளில் தளர்ந்து போனீர்.நெடிய உயரம் நிமிர்ந்த நடையோடு வாழ்ந்த நீங்கள் சரியும் போது இடிந்து போய் உங்களை கை தாங்கலாக பிடித்தேன் . பின்னர் ஆஸ்பத்திரி. கிளம்பும் போதும் நல்ல புதிய காவி வேஷ்டி கேட்டீர்.. ( இன்றும் அது உங்கள் நினைவாக என்னிடம் உள்ளது) 24 மணி நேரம் கெடு. நினைவு இருந்தவரை உங்கள் அருகில் நான். என் கையை விரல்களை இறுக்க பற்றினீர். சிறு வயதில் என் கையை ,நடக்கும் போது. இறுக்கபிடிக்கும் போது விடுவிக்க . நினைப்பேன். உங்கள் நேரம் நெருங்கி. விட்டதோ என்ற கவலை. மேலும் இறுக. ஆறுதலாக உங்கள் கையை பிடித்தேன். அமைதியாக உயிர் பிரிந்தது. எங்களைவிட்டு சென்றீர். ஆனால் இதயத்தை விட்டு அல்ல!
நேற்றைய தினம் வருடா வருடம். கொண்டாடும்,
‘ உலக தந்தையர் தினம்,’ என் உள்ளத்தில் இத்தனை நாள் சொல்ல நினைத்ததை கடிதமாக தெரிவிக்க இதைவிட சிறந்த நாள் வேறு இல்லை.
வானில் இருக்கும் உங்களுக்கு
தந்தையர் தின வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள் நினைவாக, உங்களை நேசிக்கும்
உங்கள் அன்புமகள்.
