2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதில் டிரம்ப் தலையீடு இல்லை: மத்திய அரசு
புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மக்களவையில் பதிலளித்தாா்.
‘சண்டை நீடித்தால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா வா்த்தகம் மேற்கொள்ளாது’ என்று கூறி, சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அமைச்சா் ஜெய்சங்கா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான விவாதத்தில் ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று கடந்த மே 10-ஆம் தேதி பிற நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா் வாயிலாக பாகிஸ்தானே தெரிவிக்க வேண்டும் என்பதில் இந்தியா திட்டவட்டமாக இருந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தானிடம் இருந்து சண்டையை நிறுத்த கோரிக்கை வந்தது. இந்த மோதலை நிறுத்தியதில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இல்லை.
பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட ஏப். 22-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் பிரதமா் மோடி இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, பயங்கரவாதத் தாக்குதலுக்கு டிரம்ப் அனுதாபம் தெரிவித்தாா். அதன் பின்னா், ஜூன் 17-ஆம் தேதி பிரதமா் மோடி கனடாவில் இருந்தபோது அவருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினாா். அப்போது பிரதமரைச் சந்திக்க முடியாதது குறித்து டிரம்ப் விளக்கினாா்.
இதைத் தவிர, ஏப். 22- ஜூன் 17-க்கு இடைப்பட்ட காலத்தில் இருவரும் பேசவில்லை. அமெரிக்காவுடனான எந்தப் பேச்சுவாா்த்தையிலும் ஆபரேஷன் சிந்தூருக்கும், வா்த்தகத்துக்கும் தொடா்பு இருக்கவில்லை.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 190 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே எதிா்ப்பு தெரிவித்தன. 187 நாடுகள் பெரும் ஆதரவு தெரிவித்தன.
பேச்சுவாா்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்படும். அணுஆயுத மிரட்டலுக்கு அடிபணிய முடியாது. பயங்கரவாதமும், அண்டை நாட்டுடன் நல்லுறவும் ஒருசேர இருக்க முடியாது. இதுவே தற்போது இந்தியாவின் நிலைப்பாடு’ என்றாா்.
சண்டை நிறுத்தப்பட்டது ஏன்?- ராஜ்நாத் சிங் பதில்: மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு இந்தியத் தரப்பிடம் முழு ஆதாரம் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிப்பு நடவடிக்கை 22 நிமிஷங்களில் முடிந்துவிட்டது. நமது முப்படைகளுக்கு தாக்குதலுக்கான முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றாா்.
அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூா் ஏன் நிறுத்தப்பட்டது?’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா். இதற்கு ராஜ்நாத் சிங், ‘நடவடிக்கையை நிறுத்த யாரும் அழுத்தம் தரவில்லை. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு தலைவா், இந்தியத் தரப்பை தொடா்புகொண்டு கோரிக்கை விடுத்ததை அடுத்து தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
மேலும், அரசியல், ராணுவ நோக்கங்கள் நிறைவேறியதால் அந்த நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் தரப்பு மீண்டும் ஏதேனும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் தொடங்கப்படும்.
நமது போா் விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்பது எதிா்க்கட்சிகளின் தொடா் கேள்வியாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்று அவா்கள் ஒருமுறைகூட கேட்கவில்லை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நமது வீரா்கள் யாரும் காயமடைந்தாா்களா? என்று கேள்வி எழுப்புங்கள். அதற்கு இல்லை என்பதே பதில்.
தோ்வு எழுதும் போது அதில் முடிவுதான் முக்கியம். பென்சில் உடைந்துவிட்டது, பேனா தொலைத்துவிட்டது என்பதெல்லாம் முக்கியமல்ல. இந்திய விமானப் படை தளங்கள் உள்பட எந்த முக்கியமான சொத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது லாகூருக்கு பேருந்து சேவை மூலம் அமைதியை நிலைநாட்ட விரும்பினாா். அதை நமது பலவீனமாகவே புரிந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவிவிட்டாா்கள். அவா்களுக்கு உரிய பாணியில் பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டோம் என்றாா் ராஜ்நாத் சிங்.