செய்திகள் :

ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள்! செறிவூட்டல் என்றால் என்ன?

post image

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரான் அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேறிவிட்டது. இன்னும் சில நாள்களில் அல்லது சில மாதங்களில் ஈரான் அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கி விடுவார்கள் என்று சொல்லி இஸ்ரேல், ஈரான் நாட்டின் வான் பறப்பில் இருநூறு அதிநவீன விமானங்களை அனுப்பி ஈரான் நாட்டின் அணுக்கரு செறிவூட்டல் தளங்களைக் குண்டு மழை பொழிந்து தாக்கி, பெரும் இழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல, ஈரான் நாட்டில் உள்ள பிற நாட்டினரின் துணைகொண்டு இஸ்ரேலின் மொசாத் உளவுப் பிரிவினர் ஈரானின் உயர்நிலை ராணுவ அதிகாரிகளையும், அணுக்கருத் தொழில்நுட்பம் அறிந்திருந்த அனுபவம் மிகுந்த அறிவியலாளர்களில் சிலரையும் கொலை செய்தது. இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் முடங்கிவிட்டது, அழிந்துவிட்டது என்றெல்லாம் அவரவர் விருப்பம்போல் எழுதினாலும் ஈரான் துவண்டு போகாமல், திருப்பி அடித்ததில் இஸ்ரேலும் எரிந்துகொண்டிருக்கிறது. இஸ்ரேல் இதுவரை கண்டிராத மாபெரும் அழிவை ஈரானின் ஏவுகணைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களையும், பொருள்களையும் கொடுத்து இஸ்ரேலை மத்திய கிழக்கில் அடியாள் போல பயன்படுத்திவந்த அமெரிக்க நாட்டின் அதிபர் ட்ரம்ப் என்ன செய்வது என்று தெரியாமல் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். ஈரானிடம் அணுக்கருக்குண்டு இல்லை. ஆனால் இஸ்ரேலிடம் உண்டு. ஏன் இஸ்ரேலால் அணுகுண்டுகளை ஈரானில் போட முடியவில்லை என்பதையும் சிந்திக்க வேண்டும். இஸ்ரேலின் ‘இரும்புக் கூண்டை’ ஏமாற்றி இஸ்ரேலுக்குள் நுழையும் அதிநவீன ஏவுகணைகளை ஈரான் வைத்திருப்பதையே அறிந்திராத இஸ்ரேல், அவர்கள் வேறு என்னென்ன ஆயுதங்களை வைத்திருப்பார்கள் என்பதை அறிய முடியாமல் திகைத்து நிற்கிறது.

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பது தெரிந்த செய்திதான். ஆனால் ரஷியா, சீனா, வட கொரியா போன்ற அணுகுண்டுகள் வைத்திருக்கும் நாடுகள் ஈரானுக்கு நட்புக்கரம் நீட்டுவது மேற்கத்திய நாடுகளைத் திடுக்கிட வைத்திருக்கிறது. போர் முடிவு என்னவாக இருக்கும் என்பது போகப் போகத் தெரியும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இன்றைய பேசுபொருளாக இருக்கும் ‘செறிவூட்டல்’ பற்றிய அறிவியலைப் பேசுவதே. இதனைப் பேச வேண்டுமானால், நாம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திற்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

அணுகுண்டு, அணுஉலை வரலாறு

அணுக்கருப்பிளவை அணுக்கரு ஆய்வில், பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வாக, ஜெர்மனியில், பெர்லின் ஆய்வுக் கூடத்தில், ஆட்டோ ஹான் (Otto Hahn) மற்றும் ஸ்ட்ராஸ்மன் (Fritz Strassmann) ஆகியோரின் கண்டுபிடிப்புகளைச் சொல்லலாம். இவர்கள் இருவரும் கதிர்வீச்சு - வேதியியல் அறிவியலாளர்கள். யுரேனியம்-235 என்கிற, இயற்கையின் கனமான தனிமத்தை, மிதவேக நியூட்ரான்களைக் கொண்டு தாக்கி, யுரேனியத்திற்கு மேற்பட்ட தனிமங்களை (Transuranic Elements) உருவாக்கும் சோதனைகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்படி நியூட்ரான் கொண்டு தாக்கியபோது, யுரேனியம் அணுக்கரு, முற்றிலும் எதிர்பாராதவிதமாகப் பேரியம்-56, கிரப்டான்- 36 என்று ஏறத்தாழ இரு தனிமக் கூறுகளாகப் பிரிந்தது.

அந்த வினையில் வெளிப்பட்ட ஆற்றலைக் கணக்கிட்ட வேதியியல் வல்லுநர் மெயிட்னர் (Madam Lise Meitner) மற்றும் அவரது உறவினர் ஆட்டோ ஃப்ரிஷ் (Otto Fritz), அது ஒரு புதிய கருத்தியலுக்கு இட்டுச் செல்வதாகக் கூறினர். மெயிட்னர், அதற்கு முன்பு ஆட்டோ ஹானுடன் இணைந்து ஆய்வுப் பணியாற்றியவர். நாஜி ஜெர்மனியை விட்டு வெளியேறி ஸ்வீடன் நாட்டில் தஞ்சம் புகுந்தவர். ஆட்டோ ஃப்ரிஷ்தான், அந்த நிகழ்விற்கு, ‘அணுக்கரு பிளவு’ எனப் பெயரிட்டவர். உயிரியல் செல் பிரிதலில், ஒன்று, இரண்டாகவும், இரண்டு, நான்காகவும் என்று பிரிந்துகொண்டே செல்வதை, ‘இருமை - பிளவு’ என்பார்கள். அதன் அடிப்படையிலேயே, யுரேனியம் அணுக்கரு, இரண்டாகப் பிரிவதற்கு, அணுக்கரு - பிளவு என்று, ஆட்டோ ஃப்ரிஷ் பெயரிட்டார். ஆட்டோ ஃப்ரிஷ், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர். "தொடர்வினை’‘ ஏற்படத் தேவையான ‘மாறுநிலை நிறை’ மற்றும் அணுகுண்டு செய்வதற்கான ‘மாதிரியை’ முன்னுரைத்தவரும், ஆட்டோ ஃப்ரிஷ்தான். பின்னர் மன்ஹாட்டன் திட்டத்தில், அவர் முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பை, மெய்ட்னர், மிகவும் ரகசியமாக, நோபல் பரிசு பெற்றவரும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவருமான இயற்பியலாளர் நீல்ஸ் போர் மூலமாக, அப்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த இயற்பியல் கருத்தரங்கிற்குக் கடத்தினார். ஒரு யுரேனியம்-235 அணுக்கரு பிளவையின்போது, ஐன்ஸ்டினின் E=mc2 என்ற சமன்பாட்டின் அடிப்படையில் 200 Mev ஆற்றல் வெளிப்படும். சில நியூட்ரான்களும் வெளிப்படும். அந்த நியூட்ரான்கள், மேலும் ‘அணுக்கரு பிளவுகளை’ ஏற்படுத்தக் கூடும். இப்படியே, மிகக்குறுகிய காலத்தில் (ஒரு வினாடியின் நுண்ணிய கூறொன்றில்), தொடர்ந்து, ஏராளமான அணுக்கரு-பிளவுகள் ஏற்பட்டு, அளவிலடங்கா ஆற்றல் வெளிப்படும். இதனை, ‘அணுக்கரு தொடர் - வினை’ என்று அழைத்தனர்.

யுரேனியம் 235-இல், அணுக்கரு தொடர்வினையை ஏற்படுத்தி, பெரும் ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்பதால், பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத்தை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. அந்தப் புதிய கண்டுபிடிப்பும் அது நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்ததும் தான் அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு, ஐன்ஸ்டினை ஒரு கடிதம் எழுதுமாறு தூண்டியது. அக்கடிதத்தை உருவாக்கியவர்கள், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் லியோ ஜிலர்ட் (Leo Szilard) மற்றும் யூஜின் விக்னர் (Eugene Wigner) ஆவர். அந்த கடிதம், ‘ஐன்ஸ்டின்- ஜிலர்ட் கடிதம்’ என்றே அழைக்கப்பட்டது.

ஐன்ஸ்டின் கடிதத்தின் தொடர்ச்சியாக 1942-ஆம் ஆண்டில்தான், ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்கிற ரகசிய குறியீட்டுப் பெயரில், அமெரிக்க அணு ஆயுதத் தயாரிப்புத் துறை உருவாக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் ராபர்ட் ஜே ஓப்பன்ஹைமெர் (Robert J Oppenheimer) மற்றும் படைத்தளபதி குரோவ்ஸ் (Leslie R. Groves) ) என்பவரும், அந்த ரகசியத் திட்டத்திற்கு இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். அமெரிக்காவின் ஆகச் சிறந்த அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள், பொறியியல் வல்லுநர்கள், ஐன்ஸ்டின், ஃபெர்மி, லியோ ஜிலர்டு போன்ற ஐரோப்பிய அறிவியலாளர்கள், அத்திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்டனர்.

‘மன்ஹாட்டன் திட்டத்தில்’ உருவாக்கப்பட்டவைதான் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்காவால் வீசப்பட்ட ‘குட்டிப்பையன்’, ‘குண்டு மனிதன்’ என்னும் அணுகுண்டுகள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலங்களில் ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளும் அணுகுண்டுகளை உருவாக்கி வைத்துள்ளன. இஸ்ரேலிடமும் அணுகுண்டுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. பல நாடுகளில் மின்சாரத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அணு உலைகளும் ‘அணுக்கருப்பிளவை’ என்னும் அறிவியல் அடிப்படையில்தான் செயல்படுகின்றன.

யுரேனியம் செறிவூட்டல்

இயற்கையில் கிடைக்கும் தனிமங்களில் யுரேனியம்தான் மிகவும் கனமான தனிமம். அதன் அணுக்கருவில் 92 புரோட்டான்கள் உள்ளன. எனவே அதன் அணு எண் 92. என்றாலும் அணுக்கருவில் இருக்கும் நியூட்ரான்கள் வேறுபடுவதால் இரண்டு யுரேனியம் ஐசடோப்புகள் உள்ளன. ஒரே அணு எண்ணும், மாறுபடும் நிறை எண்ணும் கொண்டிருக்கும் தனிமங்கள் ஐசடோப்புகள் எனப்படும். யுரேனியம்- 235 (92 புரோட்டான்கள், 142 நியூட்ரான்கள்), யுரேனியம் -238 (92 புரோட்டான்கள், 145 நியூட்ரான்கள்) ஆகியவை இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் ஐசடோப்புகள்.

இயற்கையில் கிடைக்கும் இந்த இரண்டு யுரேனியம் ஐசடோப்புகளில் யுரேனியம்- 235 மட்டுமே அணுக்கருப் பிளவைக்குப் பயன்படும். யுரேனியம் -238 ஐசடோப் அணுக்கருப் பிளவைக்கு உட்படாது. அதனால் அது அணுகுண்டு செய்யவோ, அணு உலை கட்டவோ பயன்படாது. இயற்கையில் இந்த இரண்டு ஐசடோப்புகளும் கலந்துதான் கிடைக்கின்றன. அதிலும் அணுக்கருப் பிளவைக்குப் பயன்படாத யுரேனியம்-238 ஐசடோப் தான் 99.7 % என்று மிகமிக அதிகளவில் உள்ளது. அணுக்கருப் பிளவைக்குப் பயன்படும் யுரேனியம்-235 ஐசடோப் 0.3% அளவே உள்ளது. அதாவது 1,000 கி.கி. இயற்கை யுரேனியத்தில் 997 கி.கி. யுரேனியம்-238 ஐசடோப்பும், 3 கி.கி. யுரேனியம் -235 ஐசடோப்பும் கிடைக்கும். 30 கி.கி. யுரேனியம் -235 ஐசடோப் பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்றால் 3,000 கி.கி. அல்லது 3 டன் இயற்கை யுரேனியம் தேவைப்படும்.

ஆக அணு ஆயுதங்கள் செய்வதற்கும், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் யுரேனியம்-235 கழிகளுக்கும் பல்லாயிரம் டன் இயற்கை யுரேனியம் தேவைப்படும். இப்படி இயற்கைத் தனிமத்திலிருந்து யுரேனியம்-235 தனிமத்தைப் பிரித்தெடுக்கும் அறிவியல் நிகழ்வுதான் ‘யுரேனியம் செறிவூட்டல்’ என்று அழைக்கப்படுகிறது. அது ஒன்றும் அத்தனை எளிதான காரியமும் அல்ல. அதற்கென்று சிறப்பான தொழில்நுட்பங்கள் தேவைப்படும்.

ஈரானின் யுரேனியம்-235 செறிவூட்டல் தளங்கள்

போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம்-235 உருவாக்கிவிட்டால் அதிலிருந்து அணு ஆயுதங்களை உருவாக்கிவிடலாம். அதனால்தான் இஸ்ரேல், ஈரான் நாட்டில் யுரேனியம்-235 செறிவூட்டல் தளங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. ஈரானின் நடான்ஸ்க் தளம், யுரேனியம் செறிவூட்டல் தளங்களில் முதன்மையானது. அதனைத்தான் தகர்த்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஃபோர்டொ அணுக்கருத்தளத்திலும் யுரேனியம்-235 செறிவூட்டல் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஃபோர்டோ செறிவூட்டல் தளம், நடான்ஸ் தளம் போன்று எளிதில் தாக்குதலுக்குள்ளாகும் இடத்தில் அமைந்திருக்கவில்லை. அது மலைக்குள், 80 மீ. (260 அடி) ஆழத்தில் அமைந்திருக்கிறது. அதனை அழிக்கும் வல்லமை இஸ்ரேலுக்கு இல்லை. ஆனால் அமெரிக்கா வைத்திருக்கும் 13,600 கி.கி. எடைகொண்ட குண்டை, பி-2 விமானத்திலிருந்து (B-2 bomber) வீசினால், ஃபார்டோவை அழிக்க முடியும் என்று அமெரிக்கா சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், நடைமுறையில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கிய போதிலும் அமெரிக்கா நினைத்த அளவுக்கு சேதாரங்கள் எதுவும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகளான ரஷியா, சீனா, வட கொரியா போன்றவை நேரடியாகப் போரில் கலந்துகொண்டால் அது மூன்றாம் உலகப் போராக வெடிக்கும் அபாயமும் உள்ளது. போரின் போக்கைப் பொருத்துதான் எதையும் சொல்ல முடியும். முதல், இரண்டாம் உலகப் போர்களை ஜெர்மனியின் நாஜிக்கள் ஆரம்பித்தனர். மூன்றாம் உலகப் போருக்குக் காரணமாகப் போகும் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் என்ன பெயர் சொல்லி அழைப்பது?

ஆனால், இப்போதைக்கு ஒன்றைச் சொல்லலாம். இஸ்ரேலுக்கு ஈரானால் ஏற்படுத்தப்பட்டுள்ள இழப்புகள் மிக அதிகம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உதவி செய்தாலும் இஸ்ரேல் மீண்டெழுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அதோடு இஸ்ரேலை நெருங்கவே முடியாது என்னும் கட்டுக்கதையை மட்டுமல்ல, இஸ்ரேலின் முதுகெலும்பையே ஈரான் முறித்திருக்கிறது என்றும் கூறலாம். இன்னொரு முறை ஈரானுடன் போரைத் தொடங்குவதற்கு முன்னால் இஸ்ரேல் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் சில மாதங்களுக்குள் ஈரான் அணுகுண்டு உருவாக்கும் வல்லமை பெற்றுவிட்டால் அதன் பிறகு ஈரான் இருக்கும் திசைப்பக்கமேகூட இஸ்ரேல் திரும்பாது.

போரில்லா அமைதியான உலகம்தான் உலக மக்கள் அனைவரும் வேண்டுவது. தலைமையேற்கத் தகுதியற்ற தலைவர்கள்தான் போர்களைத் தொடங்கி மக்களைப் பாதிப்படையச் செய்வதுடன், மக்களை ஒருவிதப் பதற்றத்திலேயே வாழும் சூழலையும் உருவாக்கி விடுகின்றனர். மக்கள் விழிப்படையும்போது இதுபோன்ற தலைவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். அதனால்தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிந்தனையாளர்களை, அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் கொடூரமாகக் கொலையும் செய்கின்றனர்.

[கட்டுரையாளர் - இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு)]

இதையும் படிக்க:அறிவியல் ஆயிரம்: நீர் மின்கலன்கள் - சீன அறிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

சொல்லப் போனால்... வெட்கப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன!

ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் விரைவில் வரும் என்று அதிரடியாகக் குறிப்பிட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.தில்லியில் சில நாள்கள் முன் நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய அமித் ஷா, “... மேலும் பார்க்க

பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்

தமிழ்நாட்டை ஆண்ட அரச மரபுகளில் குடைவரை, ஒருகல் தளி, கற்றளி என மூன்று வகைக் கோயில் கட்டமைப்புகளிலும் திறன் காட்டியவர்கள் பல்லவர்களும் பாண்டியர்களும். பல்லவர்களின் குடைவரைகளையும் ஒருகல் தளிகளையும் ஆராய்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே, மத்திய அரசு மற்றும் சார்ந்த துறைகளில் தமிழ் அறியாத பணியாளர்களைக் கொண்டுவந்து குவிப்பதன் மூலம் யார் என்ன சாதிக்க முனைகிறார்கள் எனத் தெரியவில்லை; ஆனால், அவதிப்படுவது என்னவோ மக்... மேலும் பார்க்க

கப்பல் கவிழ்ந்தது; கேள்விகள் எழுந்தன...

உலக வா்த்தகத்தில் சுமாா் 80%-90% சரக்குப் போக்குவரத்து கடல் வழியாக நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கடல் பரப்பில் சுமாா் ஒரு லட்சம் வா்த்தகக் கப்பல்கள் நாடுகளுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்கின்ற... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

காலங்காலமாக நெரிசலில் சிக்கி உயிர்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் மீண்டுமொரு முறை பெங்களூரில் ஆர்சிபி கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருப்பது மக்கள்... மேலும் பார்க்க

முடிவுக்கு வருமா பாமக குடும்பச் சண்டை?

பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டா் அன்புமணிக்கும் இடையே நிா்வாகிகள் நியமன விவகாரத்தில் ஏற்கெனவே உரசல்கள் நிலவும் வேளையில், புதுச்சேரியில் கடந்த ஆண்டு டிசம்ப... மேலும் பார்க்க