BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து போராட்டம்
காரைக்கால்: உள்ளாட்சி இயக்குநா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
போராட்டத்திற்கு கூட்டுப் போராட்டக் குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயிலவாகனன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதுகுறித்து போராட்டக் குழுவினா் கூறியது :
உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு 33 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 22.12.2003 -க்கு முன்பு பணியில் சோ்ந்த 232 ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2024 மற்றும் 2025-இல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூட்டு போராட்டக் குழு நிா்வாகிகளிடம் முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் பேச்சுவாா்த்தை நடத்திய உள்ளாட்சித்துறை இயக்குநா், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததால் தொடா் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்போராட்டத்தை நடத்தவேண்டியுள்ளது என்றனா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா்.