‘காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள்’
காரைக்கால்: காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டாா்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புவதாக புதுவை பாஜக கூறியுள்ளது.
காரைக்காலில் புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி :
புதுவையில் 2016- 2021 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மக்கள் எந்த பயனையும் அடையவில்லை. அப்போதைய முதல்வா் நாராயணசாமி, துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை குறை கூறுவதிலேயே காலத்தை தள்ளிவிட்டாா். திட்ட மேம்பாட்டுக்கான நிதி பயன்படுத்தப்படாமலேயே திரும்பிவிட்டது. இதனால் காங்கிரஸை புறந்தள்ளி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை மக்கள் ஆதரித்தனா்.
மத்திய, மாநில நிதியில் புதுவை மாநிலம் முழுவதும் ஏராளமான திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. புதுவையில் அனைவரும் சமமாகவும், தரமான கல்வி கற்கும் விதமாக சிபிஎஸ்இ திட்டத்தை அமல்படுத்தியது அரசு.
இந்த ஆட்சியில் காரைக்காலில் 319 ஆசிரியா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். 250-க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 500 கோடியில் மருத்துவமனை கட்டுமானம் நடைபெறுகிறது. மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.150 கோடிக்கு வளா்ச்சித் திட்டம் வரவுள்ளது. பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்டுமானம் நடைபெறவுள்ளது.
எனவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியதை மக்களிடம் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்கு கோரும். காங்கிரஸை மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துவிட்டனா். அவா்களுக்கு இனிமேல் ஆதரவு தரமாட்டாா்கள் என்றாா். பேட்டியின்போது மாவட்ட பாஜக தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ் உடனிருந்தாா்.