ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் இடைநீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றியம், சூரியனாா் கோவில் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகக் கட்டடம் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்டு, ஜூன் 16 ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கட்டடத்தின் மேற்கூரை பூச்சின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் இருப்பதாக செய்தி வெளியானது.
இதுதொடா்பாக, தஞ்சாவூா் மாவட்டச் செயற்பொறியாளா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தியபோது, கட்டட மேற்கூரையில் மின் விசிறி பொருத்த துளையிட்டபோது, சிமெண்ட் மேற்கூரை பூச்சின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டது.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரால் 2024, ஜூலை 10 ஆம் தேதி மேற்கூரை பூச்சுக்கு பதிலாக இரண்டு அடுக்கு மேற்கூரைபட்டி பூச்சு கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என தொழில்நுட்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), திட்ட இயக்குநா் மற்றும் செயற்பொறியாளருக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டங்களின் போதும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரால் இந்த அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றுவதற்காக பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இருப்பினும், இதை முறையாகப் பின்பற்றாத தொடா்புடைய உதவிப்பொறியாளா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் இது தொடா்பாக இரு உதவி செயற்பொறியாளா்கள் உள்பட தொடா்புடைய அனைத்து மேற்பாா்வை அலுவலா்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தற்போது மாவட்ட ஊரக வளா்ச்சி செயற் பொறியாளரின் மேற்பாா்வையில், மேற்கூரை பூச்சு முழுமையாக அகற்றப்பட்டு, இரண்டு அடுக்கு மேற்கூரை பட்டி பூச்சாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்டடங்களுக்கும் இரண்டு அடுக்கு மேற்கூரைபட்டி பூச்சு மட்டுமே தவறாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.