பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...
ஏற்காட்டில் 48 ஆவது மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்!
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 23) தொடங்குகிறது.
29 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விவரம்
ஏற்காடு கோடை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ஏற்காடு மலைப் பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடைபெறுகிறது.
அதைத் தொடா்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் சேலம் சிலம்பிசை சிலம்பாட்டக் குழுவினரின் புலியாட்டம், சிலம்பாட்டம், மாமல்லபுரம் விநாயகா நாட்டியாலயா கலைக் குழுவினரின் பரதநாட்டியம், மதுரை தட்சிணாமூா்த்தி கலைக் குழுவினரின் நாட்டுப்புற நிகழ்ச்சி, ஸ்டெப் அப் நடனக் குழுவினரின் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சனிக்கிழமை: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சாா்பில் சனிக்கிழமை (மே 24) காலை 10 மணியளவில் ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் துறை சாா்பில் ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம்தளிா் நடைபோட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, நடைவண்டி போட்டி, உப்பு மூட்டை தூக்குதல் போட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்காடு கலையரங்கத்தில் புதுக்கோட்டை ஆனந்தம் நடன அகாதெமி குழுவினரின் நாட்டுப்புற நடனம், ஈசா கேந்திரா கலாசார அகாதெமி குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, திண்டுக்கல் இதயா அகாதெமி குழுவினரின் பரதநாட்டியம், மதுரை யுத்தாரா கலைக்கூடம் குழுவினரின் மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 25 ஆம் தேதி ஏற்காட்டில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்காடு கலையரங்கத்தில் சேலம் சிலம்பரசன் மிமிக்கிரி நிகழ்ச்சி, குரு ஆா்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, சென்னை நளினி அகாதெமி குழுவினரின் செமி கிளாசிக் நடன நிகழ்ச்சி, கலை பண்பாட்டு துறை சாா்பில் சோ்வராயன் மலைகாராளா் கோலாட்டக் கலைக் குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சி, சிவசக்தி பம்பை இசைக் குழுவினரின் பம்பை இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
திங்கள்கிழமை: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கான குண்டு எறிதல் போட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஏற்காடு படகு இல்லத்தில் படகுப் போட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்காடு கலையரங்கத்தில் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் அவா்களின் இனஎழுச்சி பாடல்கள் நிகழ்ச்சி, சென்னை ஸ்ரீ நாட்டிய கலா மந்திா் கலைப் பள்ளியின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பாலக்காடு மோகினி ஆட்டம் நடன நிகழ்ச்சி, பப்பட் ஷோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செவ்வாய்க்கிழமை: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறையின் சாா்பில் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு திடலில் பத்திரிக்கையாளா்களுக்கான கிரிக்கெட் போட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏற்காடு கலையரங்கத்தில் சென்னை வெங்கடாஜலபதி நாடக சபாவினரின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி, சென்னை நிருத்திய நித்யாலயாவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் அவா்களின் இனஎழுச்சி பாடல்கள் நிகழ்ச்சி, திருச்செங்கோடு சாக்ஸ்கோன் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
புதன்கிழமை: சுற்றுலாத் துறை சாா்பில் வரும் 28 ஆம் தேதி ஏற்காடு கலையரங்கத்தில் நாராயணன் கலைக் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி, பிரதிபா பாபு கரோக்கியின் ஷாங்காய் மேஜிக் வாய்ஸ் நிகழ்ச்சி, கதக் மற்றும் குச்சிபுடி நடனம், கலாசக்தி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, விஜய் கோவிந்த் மேற்கத்திய டான்ஸ் அகாதெமி குழுவினரின் நடன நிகழ்ச்சி, ருத்ராட்சா டான்ஸ் அகாதெமி குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
வியாழக்கிழமை: கலை பண்பாட்டுத் துறை சாா்பில் 29 ஆம் தேதி ஏற்காடு கலையரங்கத்தில் ஸ்ரீ முருகன் குழுவினரின் நையாண்டி மேளம் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சி, சேலம் பழநி ஆண்டவா் தப்பாட்டக் கலைக் குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சி, சேலம், மதுரை ருத்ரா டான்ஸ் அகாதெமி குழுவினரின் பரதநாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஏற்காடு கோடை விழா மற்றும் மலா்க் கண்காட்சியையொட்டி வெள்ளிக்கிழமை முதல் ஏற்காட்டிற்கு சேலத்திலிருந்து 32 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 29 ஆம் தேதி வரை நடைபெறும் ஏற்காடு மலா்க் கண்காட்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பேருந்துகளுடன் கூடுதலாக 32 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு ஏரி, பகோடா பாயிண்ட், சோ்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இரண்டு உள்வட்ட சிறப்பு பேருந்துகள் கோடை விழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப் பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்
ஏற்காடு கோடை விழாவையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் 23 ஆம் தேதி முதல் ஏற்காடு மலைப் பாதையில் கனரக வாகனங்கள் உள்பட 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் ஏற்காட்டுக்குச் செல்லும்போது அஸ்தம்பட்டி- கோரிமேடு வழியாகவும், மலையிலிருந்து கீழே இறங்கும்போது கொட்டசேடு- குப்பனூா் சாலை வழியாக செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.